விபத்தில் சிக்கி காயம் அடைந்த வாலிபரை மருத்துவமனையில் சேர்க்க உதவிய ராகுல்
லக்னோ: லக்னோ விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கையில் வழியில் விபத்தில் சிக்கி காயம் அடைந்த வாலிபரை மருத்துவமனையில் சேர்க்க உதவி செய்துள்ளார் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி.
காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள தனது தொகுதியான அமேதியில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்த சுற்றுப்பயணத்தின்போது அவர் தொகுதி மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அவர் வியாழக்கிழமை டெல்லி திரும்ப லக்னோவில் உள்ள விமான நிலையத்திற்கு கிளம்பினார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் லக்னோ-சுல்தான்பூர் ரோட்டில் 25 வயது வாலிபர் ஒருவர் விபத்தில் சிக்கி காயம் அடைந்து கிடந்தார்.
இதை பார்த்த ராகுல் தனது காரை நிறுத்தி கீழே இறங்கி வந்து அந்த வாலிபரை பார்த்தார். உடனே தனது வாகனங்களுடன் வந்த ஆம்புலன்ஸில் வைத்து அந்த வாலிபருக்கு முதல் உதவி செய்ய வைத்தார். அதன் பிறகு அந்த வாலிபரை அதே ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்க வழிவகை செய்துவிட்டு அவர் கிளம்பிச் சென்றார்.
மேலும் அந்த வாலிபரின் குடும்பத்தாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார். காயம் அடைந்த வாலிபர் ஆஸ்தி கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்த் சிங் என்பது தெரிய வந்துள்ளது. ஜெயந்த் சிங்கின் வலது கால் எலும்பு முறிந்துள்ளது. அவர் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications