திமுகவுடன் கூட்டணி சேரலாம்.. அப்படியே இளங்கோவனை தூக்கிருங்க.. ராகுலிடம் காங். தலைகள் கோரிக்கை!
டெல்லி: டெல்லியில் இன்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர்கள், திமுகவுடன் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைக்கலாம் என்று ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேசமயம், இளங்கோவனை தலைவர் பதவியிலிருந்து தூக்கியாக வேண்டும் என்று ப.சிதம்பரம் உள்ளிட்ட சில மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியிடம் வலியுறுத்தியுள்ளனராம்.
தமிழக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை யாரும் சீந்தாத நிலையே இருந்து வந்தது. இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில், காங்கிரஸாரே எதிர்பாராத வகையில் நாங்க இருக்கோம்.. எங்க கிட்ட வாங்க என்று திமுக தலைவர் கருணாநிதி கூற, பழம் நழுவி நேரடியாக வாயில் விழுந்த கதையாக காங்கிரஸார் குதூகலமாகி விட்டனர்.
ஆனால் காங்கிரஸ் தரப்பிலோ இதுவரை எந்தப் பதிலும் இல்லை. காங்கிரஸ் மேலிடம் இதுவரை வாயே திறக்கவில்லை. வழக்கம் போல கம்மென்று உள்ளனர். வலியக்க வந்த கூட்டணி குறித்து சட்டுப்புட்டென்று முடிவெடுக்காமல் உள்ளனர். இந்த நிலையில்தான் இன்று டெல்லிக்கு தமிழக தலைவர்களை அழைத்திருந்தார் ராகுல் காந்தி.
டெல்லிக்கு வரவழைப்பு
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர்களை டெல்லிக்கு வருமாறு ராகுல் காந்தி அழைத்திருந்தார். இதையடுத்து மாநிலத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட அத்தனை கோஷ்டித் தலைவர்களும் டெல்லி வந்துள்ளனர்.
ராகுல் வீட்டில் ஆலோசனை
இவர்கள் ராகுல் காந்தியை முற்பகல் 11 மணியளவில் சந்தித்துப் பேசினர். ராகுல் காந்தியின் வீட்டில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றது.
யார் யார்
தமிழகத்திலிருந்து வந்த குழுவில் இளங்கோவன் தவிர, ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், குமரி அனந்தன், தங்கபாலு, .சட்டசபை காங்கிரஸ் தலைவர் கோபிநாத், தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன், செல்லக்குமார் உள்பட மொத்தம் 13 பேர் இடம் பெற்றுள்ளனர். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கும் சந்திப்பின்போது உடன் இருந்தார்.
என்ன பண்ணலாம்
இந்த சந்திப்பின்போது சட்டசபைத் தேர்தல் கூட்டணி குறித்து முக்கியமாக விவாதித்துள்ளார் ராகுல் காந்தி. தேர்தல் கூட்டணி தொடர்பாக தலைவர்களின் கருத்துக்களை விரிவாகக் கேட்டாராம் ராகுல்.
என்ன பண்ணக் கூடாது
மேலும் காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் குறித்தும் ராகுல் காந்தி பேசியதாக தெரிகிறது. ஒற்றுமையாக செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து அவர் விளக்கியதாக கூறப்படுகிறது.
திமுகவுக்கு ஆதரவு
இந்த ஆலோசனையின்போது திமுகவின் அழைப்பை ஏற்று திமுக கூட்டணியில் இடம் பெற பெரும்பாலான தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பெரிய அளவில் அதற்கு ஆட்சேபனையோ எதிர்ப்போ எழவில்லையாம்.
இப்ப என்ன கிடைக்கும்
முன்பு போல காங்கிரஸுக்கு திமுக சீட் தராது என்று தெரிகிறது. காரணம், ஜி.கே.வாசன் இப்போது கட்சியில் இல்லை. கடந்த காலத் தோல்விகளையும் கணக்கில் வைத்தால் 20-25 சீட்டுக்கு மேல் திமுக போகாது என்றே தெரிகிறது. மேலும் தேமுதிகவுக்காக திமுக காத்திருப்பதால், தேமுதிக வந்தால் அதற்கு நிறைய சீட் தர வேண்டும் என்பதால் காங்கிரஸுக்கு கம்மியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேமுதிக வராவிட்டால்
ஒரு வேளை தேமுதிக வராவிட்டால் காங்கிரஸுக்கு கூடுதல் சீட் கிடைக்க வாய்ப்புண்டு. அதேசமயம், தேமுதிக தனிக் கூட்டணி அமைத்தால் அங்கு போய் காங்கிரஸ் ஒட்டிக் கொள்ளும் வாய்ப்பையும் மறுப்பதிற்கில்லை.
இளங்கோவனுக்கு எதிர்ப்பு
மேலும் இந்தக் கூட்டத்தின்போது இளங்கோவனை தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று ப.சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன் போன்ற சில தலைவர்கள் கோரிக்கை வைத்ததாகவும் கூறப்படுகிறது.
கேவலமான தோல்விகள்
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இடம் பெற்றது. அடாவடியாக அடம் பிடித்து 63 சீட்டைப் பெற்றது. கடைசியில் ஜெயித்தது என்னவோ 5 சீட்டில் மட்டுமே. நாடாளுமன்றத் தேர்தலில் தனியாகப் போட்டியிட்டு டெபாசிட்டைப் பறி கொடுத்து படு கேவலமான தோல்வியைப் பெற்றது.