50 நாட்களாக புனே பிலிம் இன்ஸ்டிடியூட் மாணவர் போராட்டம்: ராகுல் ஆதரவு- ஆர்.எஸ்.எஸ். மீது பாய்ச்சல்!
புனே: புனேயில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட்டின் தலைவராக 'பி' கிரேட் நடிகர் கஜேந்திர சவுகான் நியமிக்கப்பட்டதை எதிர்த்து 50 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்துத்துவா அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலையீட்டால்தான் புனே பிலிம் இன்ஸ்டிடியூட் நாசமாக்கப்படுவதாகவும் ராகுல் சாடியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள பிலிம் இன்ஸ்டிடியூட் தலைவராக டி.வி.நடிகர் கஜேந்திர சவுகான் சில மாதங்களுக்கு முன்பாக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏறத்தாழ 50 நாட்களாக மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது.
அத்துடன் தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களுக்கு அவர்கள் கடிதம் அனுப்பினர். அதில், தகுதியற்றவர்களின் நியமனத்தை ரத்து செய்ய அரசை வலியுறுத்த வேண்டும். எதிர்காலத்தில், இதுபோன்ற நியமனத்தில் வெளிப்படைத்தன்மை கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மாணவர்களது போராட்டத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நேற்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். அப்போது மாணவர்களிடையே ராகுல் பேசியதாவது:
ஆர்.எஸ்.எஸ். இயக்கமும், கொள்கை வகுக்கும் இடத்தில் உள்ள அதன் சிந்தனையாளர்களும் கல்வி நிறுவனங்களின் மாண்பை மரியாதையைக் குலைப்பதில் குறிவைத்து செயல்படுகின்றனர். கல்வி அமைப்பை மட்டுமல்ல, அரசு நிர்வாகம், நீதி அமைப்பையும் குறிவைத்து பலவீனமாக்குகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் தங்களது கொள்கைகளை வளர்க்க விரும்புகிறார்கள். நீங்கள் அதை விமர்சித்தால் உங்களை தேசவிரோதிகள், இந்து விரோதிகள் என்று அழைப்பார்கள்.
மாணவர்கள் கோரிக்கையை பரிசீலித்து அர்த்தமுள்ள விவாதம் நடத்துவதற்கு மறுத்து அவர்களின் குரலை அரசாங்கம் நசுக்குகிறது. மாணவர்களின் குரலை நாடாளுமன்றத்தில் எழுப்புவேன்.
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
முன்னதாக ராகுல் காந்தி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களும் ஆதரவாளர்களும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.