”ஐரோப்பா டிரிப்” முடித்து டெல்லி திரும்பினார் ராகுல் காந்தி- விரைவில் காங்கிரஸ் தலைவர்?
டெல்லி : காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இரண்டு வார ஐரோப்பிய சுற்றுப் பயணத்தை முடித்து நேற்று டெல்லி திரும்பினார்.
கடந்த ஆண்டு பிப்ரவரி 15 இல் திடீரென மாயமான ராகுல் 56 நாட்களுக்குப் பின் நாடு திரும்பினார். பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடரில் முக்கிய மசோதாக்கள் மீதான எதிர்க்கட்சி விவாதங்களில் அனல் பறந்தபோது ராகுல் இல்லாதது காங்கிரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
பா.ஜ.க மட்டுமின்றி நாடு முழுவதும் ராகுல் எங்கே என கேள்விக் குரல்கள் எழுந்தன. இந்த முறை அது போன்ற சர்ச்சையில் சிக்கக் கூடாது என முடிவெடுத்த ராகுல் தன் ஐரோப்பிய சுற்றுப் பயணம் குறித்த தகவலை கடந்த டிசம்பர் 28ல் முன்கூட்டியே டுவிட்டரில் தெரிவித்து கூடவே புத்தாண்டு வாழ்த்தும் வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் அவர் தன் இருவார சுற்றுப் பயணத்தை முடித்து நேற்று டெல்லி திரும்பியுள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் காங்கிரசுக்கு புத்துயிர் ஊட்ட கட்சி நிர்வாகப் பொறுப்புகளில் ராகுல், அதிரடி மாற்றம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, "காங்கிரஸ் தலைவராக ராகுலை நியமிக்க வேண்டும்" என அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் காங்கிரஸ் பொதுக்குழு, செயற்குழு கூடி அவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.