நோ பொலிட்டிக்கல் கமெண்ட்ஸ்... பிரதமர் மோடி உரை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ராகுல்!
டெல்லி: சுதந்திர தினம் என்பதால் பிரதமர் மோடியின் உரை குறித்து எந்த கருத்தையும் தாம் தெரிவிக்க முடியாது...இது அரசியலுக்கான நாள் அல்ல என்று கூறி ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
நாட்டின் 69- வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடி ஏற்றினார். அப்போது நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், ஓராண்டு கால ஆட்சியில் மத்திய அரசு செய்த சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை குறித்து இன்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, ராகுல் காந்தி, பிரதமரின் உரை குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார்.
மேலும், இன்று அரசியல் பேசுவதற்கான நாள் இல்லை. பிரதமர் உரை குறித்து நாங்கள் நாளை கருத்து கூறுகிறோம் என்றார்.
அதேபோல் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தேசிய கொடியேற்றிய அக்கட்சி தலைவர் சோனியா காந்தியும், செய்தியாளர்களுக்கு வெறும் சுதந்திர தின வாழ்த்துக்களை மட்டும் தெரிவித்துவிட்டு வேறு எதைப்பற்றியும் பேச மறுப்பு தெரிவித்துவிட்டு சென்றார்.
Smt. Sonia Gandhi unfurls the National Flag at AICC Headquarters. #JaiHind pic.twitter.com/fEArjeplcj
— INC India (@INCIndia) August 15, 2015
முன்னதாக காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தன் துவிவேதி உள்ளிட்ட தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். தேசியக் கொடி ஏற்றிய பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.