ரயில் சேவை பாதிப்பால் ஸ்தம்பித்த மும்பை: போராட்டத்தில் குதித்த பயணிகள்
மும்பை: மும்பையில் காலையில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பயணிகள் கோபம் அடைந்து போராட்டத்தில் குதித்தனர்.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில் ரயில் இயக்கத்திற்கு தேவையான மின்சாரத்தை கடத்தும் பேண்டோகிராப் லைனில் இன்று காலை 6.30 மணிக்கு விரிசல் ஏற்பட்டது. இதனால் 3 முக்கிய வழித்தடங்களில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அலுவலகங்களுக்கு செல்ல ரயில் நிலையங்களுக்கு வந்தவர்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டதால் எரிச்சல் அடைந்தனர். 4 மணிநேரம் ரயில்கள் இயங்காததை பார்த்த பயணிகள் தானே மற்றும் கல்யாண் இடையே உள்ள திவா ரயில் நிலையம் உள்பட சில இடங்களில் போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டக்காரர்கள் போலீஸ் வாகனம் உள்பட 3 வாகனங்களுக்கு தீ வைத்தனர், ரயில்கள் மீது கல்வீசினர், தானியங்கி டிக்கெட் எந்திரத்தை அடித்து நொறுக்கி ரயில் தண்டவாளத்தில் போட்டனர். மேலும் ஹார்பர் லைன் பகுதியில் போராட்டக்காரர்கள் டிரைவர்களை தாக்கியதால் அவர்கள் ரயிலை இயக்க மறுத்தனர். அதன் பிறகு உயர் அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற வைத்தனர். இதற்கிடையே போலீசார் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தி அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
சில ரயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பயணிகள் அமைதி காக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சம்பவம் பற்றி பட்னாவிஸ் மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.