சுத்தமில்லாத கழிவறைகள்... ரயில் நிலைய அதிகாரியை சஸ்பெண்ட் செய்து சதானந்த கவுடா அதிரடி
அகமதாபாத்: குஜராத், சபர்மதி ரயில் நிலையத்தில் கழிவறைகளைத் தூய்மையாக பராமரிக்காத குற்றத்திற்காக, ரயில் நிலைய அதிகாரி ஒருவரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார் ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா.
தூய்மையான இந்தியா என்ற திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் மோடி. அரசு அலுவலகங்கள், பள்ளிக, மருத்துவமனைகள், ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பதை வலியுறுத்தி இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது.
இதன் மூலம், மகாத்மா காந்தியின் கனவான தூய்மையான இந்தியாவை வரும் 2019ம் ஆண்டிற்குள் நனவாகக வெண்டும் என்ற குறிக்கோளுடன் இத்திட்டம் தொடங்கப் படுகிறது.
இந்நிலையில், நேற்று குஜராத் மாநிலம் சபர்மதி ரயில் நிலையம் சென்றிருந்தார் மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்தாகவுடா. அங்கு அலுவலகம் மற்றும் கழிவறைகளில் அவர் திடீர் சோதனை நடத்தினார். அப்போது கழிவறைகள் மிகவும் மோசமாக இருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக கழிவறையை தூய்மையாக வைக்கத் தவறிய சம்பந்தப்பட்ட ரயில் நிலைய அதிகாரியை அவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் மத்தியில் சதானந்த கவுடா கூறியதாவது:-
நான் ரயில் நிலையங்களுக்கு சென்றால் அங்கு தூய்மைக்கு முன்னுரிமை அளித்து அலுவலகம் மற்றும் கழிவறைகளை ஆய்வு செய்கிறேன். பிரதமரின் ‘தூய்மை இந்தியா' திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று 13 லட்சம் ரெயில் ஊழியர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (வியாழக்கிழமை) இது தொடர்பாக அனைத்து ஊழியர்களும் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். 3 வருடங்களில் ரயில் பெட்டிகளில் 13 ஆயிரம் கழிவு தொட்டிகள் அமைக்கப்படும். அதன் பிறகு ரயில் பாதைகள் அசுத்தமாக வாய்ப்பு இருக்காது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.