மோடி பதவியேற்பு விழா: ராஜபக்சே உள்ளிட்ட "சார்க்" தலைவர்களுக்கு அழைப்பு!
டெல்லி: நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட அனைத்து சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் புதிய பிரதமராக நரேந்திர மோடியை நியமித்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மே 26-ந் தேதியன்று பதவியேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து டெல்லி ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்பு விழாவுக்கான பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பின் சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து நாட்டின் தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. இந்த சார்க் அமைப்பில் ஆப்கான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை உள்ளன.
இதனால் இலங்கை அதிபர் ராஜபக்சே, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதற்கான பணிகளை வெளியுறவுத் துறை அதிகாரிகள் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதை வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும் பாஜகவின் செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமனோ, அண்டை நாடுகளின் நல்லுறவு நீடிக்க வேண்டும் என்பதற்காகவே சார்க் அமைப்பில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.