ராஜஸ்தானில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஊழல்: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் ஊழல் செய்தது தொடர்பாக அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெஹ்லாட், காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் ராஜஸ்தான், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையை வழங்கும் டென்டர் ஜிகித்சா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டது. இந்த நிறுவனத்தை முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா நடத்தி வருகிறார். அந்நிறுவனத்தின் இயக்குனர்களாக காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.
ஜிகித்சா நிறுவனம் ஆம்புலன்ஸ் சேவையில் நிதி முறைகேடுகள் செய்து அரசுக்கு ரூ.14 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியதை ராஜஸ்தான் சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2013ம் ஆண்டில் ராஜஸ்தானில் ஆட்சியில் இருந்த அசோக் கெஹ்லாட் அரசு ஜிகித்சா நிறுவனத்திற்கு டென்டர் வழங்க காரணமே அதற்கு உள்ள அரசியல் செல்வாக்கு தான் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
ஆம்புலன்ஸ் சேவையில் ஊழல் நடந்திருப்பதை கண்டறிந்த பிறகு ராஜஸ்தான் மாநில போலீசார் இது குறித்து வழக்கப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில்(எஃப்.ஐ.ஆர்) ஜிகித்சா நிறுவனத்திற்கு டென்டர் வழங்கிய முன்னாள் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட், சச்சின் பைலட், கார்த்தி சிதம்பரம், ரவி கிருஷ்ணா உள்ளிட்டோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.