ஜக்கி வாசுதேவுடன் இணைந்த ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு - மண் காப்போம் இயக்கத்தோடு பணியாற்ற முடிவு
ஜெய்பூர்: ஜக்கி வாசுதேவின் ஈஷா நிறுவனம் தொடங்கியுள்ள "மண் காப்போம்" என்ற இயக்கத்தோடு இணைந்து செயல்பட ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
மகா சிவராத்திரி முடிந்த கையோடு ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், "மண் காப்போம்" என்ற விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
அதன் ஒரு பகுதியாக இரு சக்கர வாகனத்தில் ஐரோப்பிய நாடுகள், மத்திய ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகளுக்கு பயணித்த ஜக்கி வாசுதேவ் தற்போது வட இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.

ராஜஸ்தான் அரசு
இந்த நிலையில் ஜக்கி வாசுதேவின் மண் காப்போம் என்ற பிரச்சார இயக்கத்தில் ராஜஸ்தான் மாநில அரசு இணைவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. ராஜஸ்தான் சென்ற ஜக்கி வாசுதேவ் அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட்டை நேரில் சந்தித்தார். இந்த புகைப்படங்களை முதலமைச்சர் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

முதலமைச்சர் கெலாட் வாழ்த்து
இதுகுறித்து ட்விட்டரில் அவர் தெரிவித்து இருப்பதாவது, "மண் நமது தாய். நாம் எப்போதுமே மண்ணை அன்புடனும், மரியாதையுடனும் கையாண்டு வருகிறோம். மண் வளம் பாதிக்கப்பட்டு வருவதை அறியும்போது வேதனையாக இருக்கிறது. இதற்காக ஜக்கி வாசுதேவ் மண் காப்போம் இயக்கத்தை தொடங்கி இருப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. இந்த இயக்கம் வெற்றிபெறுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

ஜக்கி வாசுதேவ் நன்றி
இதனை தொடர்ந்து அசோக் கெலாட்டுக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஜக்கி வாசுதேவ், "முதலமைச்சர் அசோக் கெலாட் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு அளித்ததற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மண் வளத்தை பாதுகாக்கும் கொள்கைகளை உருவாக்கி அழகிய நிலத்தில் நீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்யும் பணி ராஜஸ்தானில் உங்கள் தலைமையில் நடக்கட்டும்." என்று கூறியுள்ளார்.

ராஜஸ்தான் அமைச்சர்
இது தொடர்பாக ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ராஜேஷ் சந்த் மீனா பேசுகையில், "ஜக்கி வாசுதேவின் மண் காப்போம் இயக்கம் தனி நபருடையது அல்ல. ஒவ்வொரு சாமானிய மனிதனின் இயக்கம் என்றார். இதற்கு முன்னதாக குஜராத் மாநிலமும் ஜக்கி வாசுதேவின் இந்த இயக்கத்துடன் இணைந்தது. அதேபோல் குடியரசு துணைத் தலைவர் ராஜ்நாத் சிங்கும் மண் காப்போம் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications