90 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்.. ராஜஸ்தானில் கலையும் காங்கிரஸ் ஆட்சி? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து புதிய முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் 90 பேர் ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்து சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில் இன்னும் எந்த முடிவுகள் எடுக்கப்படாத நிலையில் அம்மாநில உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 ல் இங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. ஆட்சியமைக்க 101 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 100 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில் சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவு காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. பாஜகவுக்கு 72 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இதனால் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அசோக் கெலாட் முதல்வராக உள்ளார். இளம் தலைவரான சச்சின் பைலட், அசோக் கெலாட் இடையே முதல்வர் பதவிக்கு போட்டி நடந்த நிலையில் சோனியா காந்தியின் ஆதரவுடன் அசோக் கெலாட் முதல்வரானார்.

ராஜஸ்தான் அரசியல் குழப்பம்
இதன் தொடர்ச்சியாக சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். ராகுல் காந்தி சமாதானம் செய்த அவர் துணை முதலமைச்சரானார். தற்போது அவர் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் அக்டோபர் மாதம் நடந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் அசோக் கெலாட் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ராஜஸ்தான் புதிய முதல்வராக சச்சின் பைலட்டை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அசோக் கெலாட் தரப்பு எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அரசியல் குழப்பம் ஏற்பட்டது.

90 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம்
மேலும் சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். இதுதொடர்பாக சபாநாயகர் சிபி ஜோசியிடம் 90 எம்எல்ஏக்கள் கடிதம் வழங்கினர். இதற்கிடையே தான் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகினார். மேலும் அவர் தற்போதும் ராஜஸ்தான் முதல்வராக தொடர்ந்து வருகிறார்.

வாபஸ் வாங்காத எம்எல்ஏக்கள்
இந்நிலையில் தான் அக்டோபர் 25ல் 90 எம்எல்ஏக்கள் வழங்கிய ராஜினாமா கடிதம் மீது இன்று வரை சபாநாயகர் சிபி ஜோஷி நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. ஜனவரி 23ல் சட்டசபை கூட்டம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதத்தை திரும்ப பெறலாம் என கூறப்பட்டு வருகிறது. இந்த கடிதத்தை சட்டசபை தொடருக்கு முன்பாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் ஆளும் அரசுக்கு சிக்கல் ஏற்படலாம்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
நிலைமை இவ்வாறு இருக்க பாஜக சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பாஜக எம்எல்ஏ ராஜேந்தரி ரத்ததோர் தாக்கல் செய்த மனுவில், ‛‛காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கிய விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ராஜஸ்தான் அரசு பதிலளிக்க உத்தரவிட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
இந்நிலையில் தான் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‛‛காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் வழங்கிய விஷயத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? என்பது பற்றி பதிலளிக்க வேண்டும்'' என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம், சபாநாயகர் சிபி ஜோஷிக்கு உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 16ம் தேதிக்கு உத்தரவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications