இறைச்சி தடை விவகாரம்.. கடிதங்கள் மூலம் மல்லுக்கட்டும் மகா. முதல்வர் பட்னவிஸ் - ராஜ்தீப் சர்தேசாய்
மும்பை: மாட்டிறைச்சிக்கு தடை விதிப்பு, விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட விவகாரங்களில் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய்க்கும் மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸுக்கும் இடையே பரபரப்பான கடிதப் போர் நிகழ்ந்து வருகிறது.
இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சியின் மூத்த செய்தியாசிரியரான ராஜ்தீப் சர்தேசாய் அண்மையில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளேட்டில் மாட்டிறைச்சி தடை, இறைச்சி விற்பனை தடை, மும்பை போலீஸ் கமிஷனர் மாற்றம், மராத்வாடா விவசாயிகள் தற்கொலை பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து ஒரு பகிரங்க கடிதத்தை மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸுக்கு எழுதியிருந்தார்.
இந்த கடிதத்தை ராஜ்தீப் தமது இணையப் பக்கம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்களிலும் பகிர்ந்து கொண்டார். பட்னவிஸ் ஆதரவாளர்கள் ராஜ்தீப்புடன் 'யுத்தத்தை'யே நடத்தி வருகின்றனர் சமூக வலைதளங்களில்...
இந்நிலையில் மகாராஷ்டிரா முதல்வர் பட்னவிஸ், ராஜ்தீப் சர்தேசாயுக்கு பதில் கடிதம் அனுப்பியிருந்தார். அது ஹிந்துஸ்தான் டைமிஸில் வெளியானது. அதில் இறைச்சி விற்பனை தடையை முந்தைய காங்கிரஸ் அரசுகள் தான் கொண்டுவந்தன என்றும் ராஜ்தீப் ஒரு இடதுசாரியாக எழுதுகிறார் என்றும் பதில் அளித்திருந்தார்.
பட்னவிஸ் கடிதத்தில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்:
- இறைச்சி விற்பனைக்கு தடை விதித்து எங்கள் அரசால் எந்த ஒரு ஆணையும் பிறப்பிக்கவில்லை.
- ஜைன மதத்தினரின் பண்டிகையையொட்டி இறைச்சி விற்பனை கடைகளை 2 நாட்கள் மூடுவது என்பது 2004ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு மேற்கொண்ட முடிவு. இதைத்தான் அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் அரசு தெரிவித்தது.
- மும்பை உள்ளிட்ட மாநகராட்சிகள் தங்களுக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இறைச்சி விற்பனைக்கு கூடுதல் நாட்கள் தடை விதிக்கின்றன. இது 1994ஆம் ஆண்டு முதல் கடைபிடிக்கப்படுகிற ஒன்றாகும்.
- மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த ராகேஷ் மரியா மாற்றப்பட்டதற்கும் ஷீனா போரா கொலை வழக்கு விசாரணைக்கும் தொடர்பிருப்பதாக குழம்பிக் கொண்டிருக்கிறீர்கள்.
- ஷீனா போரா கொலை வழக்கைப் பொறுத்தவரையில் ராகேஷ் மரியா விசாரணை அதிகாரி அல்ல; ஜஸ்ட் ஒரு கண்காணிப்பாளர் அவ்வளவே.
- விநாயகர் சதுர்த்தி போன்ற பண்டிகைகள் வருகிற போது அவற்றுக்கு நடுவே காவல்துறை உயர் அதிகாரிகளை மாற்றுவதற்கு பதிலாக அந்த பண்டிகைகளுக்கு முன்னரே மாற்றி உயர் பதவி கொடுக்கலாம் என ஒரு அரசு எண்ணுவதில் என்ன தவறு?
- விவசாயிகள் தற்கொலைக்கு காரணம் மகாராஷ்டிராவில் 15 ஆண்டுகாலம் இருந்த அரசின் மோசமான செயல்பாடுகள்தான். நாங்கள் ஜல்யுக்தா ஷிவார் யோஜனா திட்டத்தின் மூலமான மகாராஷ்டிராவை வறட்சியின் பிடியில் இருந்து விடுவித்துள்ளோம்.
- இறைச்சிக்கு தடை விதிக்கப்படுகிறதா? இல்லையா என்பதைவிட சாமானியன் தனது சாப்பாட்டு தட்டில் ரொட்டியோ சாதமோ இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.. அதை பற்றித்தான் நான் அதிகம் கவலை கொள்கிறேன்.
இவ்வாறு பட்னவிஸ் பதிலளித்திருந்தார்.
இதற்கு ராஜ்தீப் சர்தேசாய் தமது இணையப் பக்கத்தில் மிக விரிவான நீண்ட பதிலை பதிவு செய்துள்ளார். அதில் குறிப்பிட்ட சில அம்சங்கள்:
- மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அத்தொழில் சார்ந்த பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழந்துபோயுள்ளனர். அவர்கள் இந்த நாட்டின் குடிமக்கள்.. அவர்களில் பலர் உங்களுக்கு வாக்களித்தவர்களாகவும் இருக்கலாம்.
- மாட்டிறைச்சி தடை மூலம் பொதுமக்களுக்கு என்னதான் பலன் கிடைக்கப் போகிறது? அல்லது உங்களது ஏதேனும் ஒரு அஜெண்டாவுக்காக இதை செயல்படுத்துகிறீர்களா என்ற கேள்வி எழுகிறது.
- ஜைன மதத்தினரின் திருவிழாவையொட்டி இறைச்சி விற்பனைக்கு தடை விதிப்பது என்பது கடந்த கால காங்கிரஸ் ஆட்சிக் காலங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டதுதான்.. நானும் நன்கு அறிவேன். ஆனால் பாரதிய ஜனதா ஆதிக்கம் உள்ள மிரா பயாந்தர் முனிசிபல் கார்ப்பரேஷனில் இம்முறைதான் யாரும் எதிர்பார்க்காத வகையில் வழக்கத்துக்கு மாறாக 8 நாட்கள் தடை விதிக்கப்பட்டது.
- அத்துடன் பாஜக எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், ஜைன மத பிரதிநிதிகள் மும்பை நகரம் முழுவதற்கும் இறைச்சி விற்பனைக்கான தடையை விரிவுபடுத்தவும் முயற்சித்தனர். ஆனால் சிவசேனா, மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா எதிர்ப்பால் அவர்கள் பின்வாங்க நேரிட்டது.
- மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த ராகேஷ் மரியா திடீரென டிரான்ஸ்பர் செய்யப்பட்டு ஊர்க்காவல் படைக்கு தூக்கியடிக்கப்பட்டார். அதே நேரத்தில் ஷீனா போரா வழக்கையும் விசாரிப்பார் எனவும் கூறினீர்கள்.
- மும்பை புதிய கமிஷனராக அகமது ஜாவேத் பொறுப்பேற்ற நிலையில் ஷீனா போரா வழக்கை யார் விசாரிப்பது என்ற குழப்ப நிலை உருவானது.
- இந்த நிலையில் திடீரென ஷீனா போரா வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றியிருக்கிறீர்கள் அப்படியெனில் மும்பை போலீசார் மீது உங்களுக்கு திறமை இல்லாமல் போனதா? எதற்காக சிபிஐ வசம் இந்த வழக்கு மாற்றப்பட்டது?
- நாட்டிலேயே மிக அதிகமாக மராத்வாடா பகுதியில்தான் கடந்த ஜனவரியில் இருந்து இதுவரை 729 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தப் பகுதியில் டேங்கர் மாஃபியாக்கள், கந்துவட்டிக்காரர்கள்தான் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். மற்றபடி நீங்கள் கூறுகிற திட்டங்களையெல்லாம் நானும் நன்கு அறிவேன்.
- மராத்வாடா விவசாயிகள் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு? தேர்தலின் போது நீங்கள் முன்வைத்த நீர்த்தேக்கத் திட்ட ஊழலில் தொடர்புடையோரை தண்டித்துள்ளீர்களா?
என நீள்கிறது ராஜ்தேசாயின் கடிதம்.
அத்துடன் தாம் 27 ஆண்டுகால ஊடகத்துறையில் மகாராஷ்டிராவின் சரத்பவார் அரசு, உத்தரப்பிரதேசத்தின் முலாயம்சிங் மற்றும் மாயாவதி அரசுகளால் எதிர்கொண்ட நெருக்கடிகள், தாக்குதல்கள் என்பவற்றையும் ராஜ்தீப் விவரித்திருக்கிறார்.
இது ஒரு தொடர்கதையாகுமோ?