பாகிஸ்தானை சிதறடித்த "ஆபரேஷன் சிந்தூர்.." யார் பெயர் வைத்தது தெரியுமா! ராஜ்நாத் சிங் மேஜர் தகவல்
காந்தி நகர்: பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படைத் தளத்திற்கு நேரில் சென்று அங்குள்ள வீரர்களைப் பாராட்டினார். அப்போது பாதுகாப்புத் துறையின் செயல்பாடுகள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் அந்த பெயரைச் சூட்டியது யார் என்பது குறித்தும் முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த சில வாரம் மோதல் போக்கு நிலவி வந்தது. ஆபரேஷன் சிந்தூர் வெற்றியைப் பொறுக்க முடியாமல் பாகிஸ்தான் அத்துமீறியதே இதற்குக் காரணமாகும். எல்லையோர பகுதிகளைக் குறிவைத்து இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. இருப்பினும், அந்த தாக்குதல்களை முறியடித்த பாகிஸ்தான் தக்க பதிலடியைக் கொடுத்தது.

இதனால் பயந்து போன பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய அழைப்புவிடுத்தது. பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக இந்தியாவும் அந்த போர் நிறுத்தத்தை ஏற்கவே மோதல் முடிவுக்கு வந்தது.
பிரதமர் மோடி
மோதல் முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே பிரதமர் நரேந்திர மோடி குஜராத் ஆதம்பூரில் உள்ள விமானப்படைத் தளத்திற்கு நேரில் சென்று அங்குள்ள அதிகாரிகளைப் பாராட்டினார். மேலும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான எஸ் 400 அழிக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் போலி செய்தியைப் பரப்பிய நிலையில், அதைப் பொய் என்பதைக் காட்டும் வகையில் அதே எஸ்400 அருகே நின்று உரையாற்றினார்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்
பிரதமர் மோடியைத் தொடர்ந்து இப்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் விமானப்படை அதிகாரிகளைப் பாராட்டியுள்ளார். குஜராத்தில் உள்ள புஜ் விமானப்படைத் தளத்திற்குச் சென்ற பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், அங்கு விமானப்படை அதிகாரிகளை நேரில் பாராட்டினார். ஆபரேஷன் சிந்தூரில் விமானப்படை முக்கிய பங்கு வகித்ததாகவும், உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
பெயரிட்டது யார்
அங்கே விமானப்படை வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், "ஆபரேன் சிந்தூர் என்பது வெறும் அலங்காரத்தின் சின்னம் அல்ல.. மாறாக துணிச்சல் மற்றும் மன உறுதியின் சின்னம் என்பதை நீங்கள் காட்டியுள்ளீர்கள். இப்போது பயங்கரவாதத்தின் நெற்றியில் சிந்தூர் வரையப்பட்டுள்ளது" என்றார். மேலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீதான இந்த நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்தூர் எனப் பெயரிட்டதே பிரதமர் மோடி தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய பாதுகாப்புத் துறையின் தொழில்நுட்பம் எந்தளவுக்கு முன்னேறி இருக்கிறது.. பாதுகாப்புப் படை எந்தளவுக்கு நவீனமாக இருக்கிறது என்பதை நீங்கள் உலகிற்குக் காட்டியுள்ளீர்கள்.. இந்தியா இனி மற்ற நாடுகளின் ஆயுதங்களைச் சார்ந்திருக்காது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் சக்திவாய்ந்தவை மற்றும் நம்பகமானவை. அவ்வளவு ஏன் பாகிஸ்தான் கூட நமது பிரம்மோஸ் ஏவுகணையின் சக்தியை ஒப்புக்கொண்டுள்ளது" என்றார்.
சர்வதேச நிதியம்
அதேபோல சர்வதேச நாணய நிதியம் பாகிஸ்தானுக்கு நிதி வழங்கக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிதியைப் பெறும் பாகிஸ்தான் அதைத் தீவிரவாத நடவடிக்கைகளுக்குத் தான் பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார். இதனால் பாகிஸ்தானுக்கு மீண்டும் நிதி வழங்கும் முன்பு சர்வதேச நாணய நிதியம் இது குறித்து தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
விமானப்படையின் சிறப்புகள் குறித்து அவர் மேலும் பேசுகையில், "ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, இந்திய விமானப்படை வீரத்தை வெளிப்படுத்தியது மட்டுமல்லாமல், இந்தியாவின் போர் உத்தி மற்றும் தொழில்நுட்பம் இரண்டும் இப்போது மாறிவிட்டன என்பதை உலகிற்குக் காட்டியது. புதிய இந்தியா வலிமையானது என்ற செய்தியை நீங்கள் முழு உலகிற்கும் காட்டியுள்ளீர்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications