தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கு பிப்ரவரி 7-ல் தேர்தல்
டெல்லி: தமிழகத்தில் 6 ராஜ்யசபா இடங்களுக்கு பிப்ரவரி 7-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
தமிழகம் உட்பட 16 மாநிலங்களைச் சேர்ந்த 55 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதி முதல் 12-ந் தேதிக்குள் முடிவடைய இருக்கிறது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஜின்னா (திமுக), பாலகங்கா (அதிமுக), ரங்கராஜன் (மார்க்சிஸ்ட்), வசந்தி ஸ்டான்லி (திமுக), காங்கிரஸின் ஜிகே வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோரின் பதவிக் காலமும் முடிகிறது.
இதைத் தொடர்ந்து இன்று தேர்தல் ஆணையம், 55 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தலை அறிவித்தது. இத்தேர்தலுக்கான தேதி வேட்பு மனுத்தாக்கல் 21-ந் தேதி தொடங்குகிறது.
வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய கடைசிநாள் ஜனவரி 28. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் ஜனவரி 31.
பிப்ரவரி 7-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். சட்டசபை எம்.எல்.ஏக்கள் இத்தேர்தலில் தங்களது வாக்குகளைப் பதிவு செய்வர்.
பிப்ரவரி 7-ந் தேதி மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அனைத்து தேர்தல் பணிகளும் பிப்ரவரி 10ந் தேதிக்கு முன்னதாக முடிவடைந்துவிடும்.