வெடித்து சிதறிய உடல்கள்.. சிவகாசி எங்கும் மரண ஓலம்! வெடி விபத்தில் 13 பேர் பலி -ராமதாஸ் இரங்கல்
சென்னை: சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 13 பேர் குடும்பத்தினருக்கு பா.ம.க. நிறுவனர் இராமதாசு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அருகே அமைந்து உள்ளது ரெங்கபாளையம் கிராமம். அங்குள்ள ஏராளமான பட்டாசு தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் அமைந்து உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. அதில் 9 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார். அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்து, தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்து இருக்கும் அறிக்கையில், "விருதுநகர் மாவட்டம், சிவகாசியை அடுத்த ரெங்கபாளையத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 9 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழ் நாடு அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
அண்மைக் காலங்களில் பட்டாசு ஆலைகள் மற்றும் வெடி ஆலைகளில் விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. வாரத்திற்கு ஒரு விபத்து என்பது வாடிக்கையாகி விட்டது. பட்டாசு ஆலைகள் தொடர்பான பாதுகாப்பு விதிகள் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படாதது தான் இத்தகைய விபத்துகள் அதிகரிப்பதற்கு காரணம் ஆகும். பட்டாசு ஆலை பாதுகாப்பு விதிகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தி இத்தகைய விபத்துகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்று அவர் கோரிக்கை விடுத்து உள்ளார். இதற்கிடையே பலியானவர்கள் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்து உள்ளது.












Click it and Unblock the Notifications