விவசாய குடும்பத்தில் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்த ராம்நாத் கோவிந்த்
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து நாட்டின் முதல் குடிமகனாக உயர்ந்துள்ளார் ராம்நாத் கோவிந்த்.
டெல்லி: நாட்டின் 14வது குடியரசுத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ராம்நாத் கோவிந்த். தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் மீரா குமாரை தோற்கடித்து குடியரசுத்தலைவராக வெற்றி பெற்றுள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் தேஹத் மாவட்டம் தேராபூரில், 1945ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் ராம்நாத் கோவிந்த். கான்பூர் பல்கலைக் கழகத்தில் சட்டம் பயின்றார்.

•1971ஆம் ஆண்டு பார் கவுன்சிலில் இணைந்த ராம்நாத் கோவிந்த், டெல்லி உயர் நீதி மன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் மொத்தம் 16 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றினார்.
•வழக்கறிஞர் என்ற முறையில், தலித் மற்றும் பழங்குடியின பெண்கள், ஏழை பெண்கள் உள்ளிட்ட நலிந்த பிரிவினருக்கு சட்ட உதவி வழங்கி உள்ளார்.
•ராம்நாத் கோவிந்த் 1974ஆம் ஆண்டு சவிதாவை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
•1977ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி செய்த ஜனதா அரசில் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் தனிச் செயலாளராக பணியாற்றினார். இதுதான் அவரது அரசியல் பயணத்திற்கு வித்திட்டது.
•அதன்பிறகு பாஜகவில் இணைந்த இவர், உத்தரபிரதேச மாநிலம் காதம்பூர் லோக்சபா தொகுதியில் கடந்த 1991ஆம் ஆண்டு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். எனினும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மற்றும் அத்வானியுடன் நெருக்கமாக இருந்தார்.
•இதையடுத்து, உத்தர பிரதேசத்திலிருந்து 1994ல் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 2 முறை அதாவது 2006ஆம் ஆண்டு வரை ராம்நாத் கோவிந்த் ராஜ்யசபா உறுப்பினராக பணியாற்றினார்.
•1998 முதல் 2002 வரை பாஜகவின் பிற்படுத்தப்பட்டோருக்கான பிரிவின் தலைவராகப் பதவிவகித்தவர். அப்போது தலித் மற்றும் பழங்குடியினர் நலன், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் மற்றும் சட்டம் மற்றும் நீதித் துறை உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற நிலைக்குழுக்களின் உறுப்பினராக பதவி வகித்தார்.
•பாஜகவின் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவின் தேசிய தலைவராகவும், கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் ராம்நாத் பதவி வகித்துள்ளார்.
•கடந்த 2002ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில், இந்தியப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.
•கல்வித் துறையிலும் இவர் முக்கியப் பங்கு வகித்துள்ளார். குறிப்பாக, டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் (லக்னோ) நிர்வாகக் குழு உறுப்பினராகவும் கொல்கத்தா ஐஐஎம் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.
•ராஜ்யசபா உறுப்பினராகத் தாய்லாந்து, நேபாளம், பாகிஸ்தான், சிங்கப்பூர், ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.
•மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு, 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பீகார் மாநில ஆளுநராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டார்.
•ஆளும் பாஜக அரசின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராம்நாத் கோவிந்த் தன்னை எதிர்த்து போட்டியிட்ட எதிர்கட்சி வேட்பாளர் மீராகுமாரை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications