புதிய ரூபாய் நோட்டுக்களை கள்ள நோட்டு அடிக்க முடியாது.. மவுனம் கலைத்த ஆர்.பி.ஐ கவர்னர்
மும்பை: ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் வாபசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் நீங்கி, இயல்பு நிலை திரும்ப ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கை எடுப்பதாக அதன் ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறினார்.
புழக்கத்திலுள்ள 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் வெளியாகிவருகின்றன. அதே நேரத்தில், குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் தட்டுப்பாடாக உள்ளதால், மக்களின் தினசரி வாழ்வு பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
இந்த விவகாரத்தில் இதுவரை வாய் திறக்காமல் இருந்த, ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் பட்டேல், முதன்முதலாக தனது மவுனத்தை கலைத்து, செய்தி நிறுவனத்திற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:
ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, நாட்டில் நிலவுகிற நிலைமையை ரிசர்வ் வங்கி தினசரி கண்காணித்து வருகிறது. ரூ.100, ரூ.500 நோட்டுகள் அச்சிடும் பணியை அச்சகங்கள் மேற்கொண்டு வருகின்றன.
மக்களின் உண்மையான பிரச்சினையை தீர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு தேடித்தந்து, சகஜ நிலையை முடிந்த அளவுக்கு விரைவாக கொண்டு வருவதற்கு ரிசர்வ் வங்கி முயற்சி எடுத்து வருகிறது.
பொதுமக்கள் ரொக்க பணத்துக்கு பதிலாக டெபிட் கார்டுகள், டிஜிட்டல் வேலட் பயன்படுத்த தொடங்க வேண்டும். இது பரிவர்த்தனைகளை மலிவாக்கும், எளிதாக்கும். இது காலப்போக்கில் வளர்ச்சி அடைந்த நாடுகள் போன்று, இந்தியாவும் மிகக்குறைவான ரொக்க பணத்தை பயன்படுத்துகிற பொருளாதார நிலைக்கு மாறுவதற்கு உதவும்.
வங்கிகள், வியாபாரிகளை பெருமளவில் ஸ்வைப் மெஷின்களை பயன்படுத்த செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி கொண்டிருக்கிறோம். அப்போதுதான் டெபிட் கார்டுகள் பயன்பாடு இன்னும் அதிகரிக்கும்.
ஒவ்வொரு நாளும் வங்கிகளுடன் ரிசர்வ் வங்கி பேசுகிறது. சகஜ நிலைமை கொஞ்சம், கொஞ்சமாக திரும்பி வருவதாக வங்கிகள், எங்களிடம் சொல்கின்றன. வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் இருந்து வந்த நீண்ட வரிசைகள் குறைந்திருக்கின்றன. சந்தைகள் செயல்பட தொடங்கி உள்ளன. அன்றாட பயன்பாட்டுப்பொருட்கள் பற்றாக்குறை என தகவல்கள் எதுவும் வரவில்லை.
ஏ.டி.எம். எந்திரங்களை மறு சீரமைக்கும் பணியில் சுமார் 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். காகிதப்பணம் கையிருப்பில் உள்ளது. பழைய நோட்டின் அளவு, தடிமனுடன் ஒப்பிடுகையில், இப்போது வருகிற புதிய ரூபாய் நோட்டுகள் மாறுபட்டிருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. கள்ள நோட்டுகள் அடிக்க முடியாத அளவுக்கு புதிய ரூபாய் நோட்டுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதே இதற்கு காரணம். இந்த அளவுக்கு ஒரு மாற்றத்தை நீங்கள் செய்கிறபோது, மிகச் சிறப்பான தரத்தை கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.