மறு உத்தரவு வரும்வரை தமிழகத்திற்கு 2000 கன அடி தண்ணீர்.. கர்நாடகாவுக்கு சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: மறு உத்தரவு வரும்வரை தமிழகத்திற்கு வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழகம்-கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களும் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமித்தவராய் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று மதியம் விசாரிக்கப்பட்டது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை, காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு விசாரணையை கையிலெடுக்கவும் சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் வாதிட்டார்.
இதற்காக பல்வேறு அரசியல் சாசன சட்ட பிரிவுகளை அவர் உதாரணத்திற்கு காண்பித்தார். அவர் சுமார் ஒன்றரை மணி நேரம் நீண்ட வாதத்தை முன்வைத்தார்.
கர்நாடக தரப்பில் பாலி.எஸ்.நாரிமன் இதையடுத்து வாதம் முன்வைத்தார். அவர் சுமார் 20 நிமிடங்கள் வாதிட்டார். மேல்முறையீடு மனுவை சுப்ரீம்கோர்ட் விசாரிக்க முடியும், அதிகாரம் உள்ளது என நாரிமன் வாதிட்டார். தமிழகம் தரப்பில் வாதிட்ட சேகர் நாப்தே, தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று வாதிட்டார்.
வாத, விவாதங்கள் தொடர்ந்து கொண்டே இருந்ததால், நாளைக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர் நீதிபதிகள். முன்னதாக, தாங்கள் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவுப்படி, தமிழகத்திற்கு, கர்நாடகா வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரை திறந்துவிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மறு உத்தரவு வரும்வரை 2000 கன அடி தண்ணீர் திறப்பை உறுதி செய்ய கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், இரு மாநிலங்களிலும் ஆய்வு நடத்திய உயர்மட்ட நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கையில் தங்களுக்கு ஆட்சேபனை உள்ளதாக தமிழகம் கூறியதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், ஆட்சேபனை மனுவை, வரும் 25ம் தேதிக்குள் தமிழகம் தாக்கல் செய்யலாம் என்று கூறியுள்ளது.
இம்மாதம் 7ம் தேதி முதல், 18ம் தேதி வரை வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீரை கர்நாடகா, தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அந்த அளவுக்கு கர்நாடகா தண்ணீர் திறந்துவிட்டிருந்த நிலையில், சுப்ரீம்கோர்ட் தண்ணீர் திறப்பை தொடர உத்தரவிட்டுள்ளது. நாளை விசாரணையின்போது சுப்ரீம்கோர்ட் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், மறு உத்தரவுவரும்வரை தமிழகத்திற்கு கர்நாடகா தண்ணீரை தொடர்ந்து திறந்துவிட வேண்டிவரும்.












Click it and Unblock the Notifications