காவிரி வழக்கு.. கர்நாடக வக்கீல் ஃபீஸ் செலவு ரூ.76 கோடி.. நாரிமனை மாற்ற கோரி பாஜக தலைவர் ஆக்ரோஷம்
பெங்களூர்: காவிரி பிரச்சினை பற்றி விவாதிப்பதற்காக, கர்நாடக சட்டசபையின் இரு அவைகளின் சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது.
மேலவை எதிர்க்கட்சி தலைவரான பாஜகவின் ஈஸ்வரப்பா பேசுகையில், நாரிமனால் கர்நாடகாவுக்கு எந்த லாபமும் ஏற்படவில்லை. உச்சநீதிமன்ற உத்தரவை மதித்து நடங்கள் என்று சொல்வதற்கு நமக்கு ஒரு வழக்கறிஞர் தேவையா. கர்நாடகாவிலே, மிகவும் அனுபவம் வாய்ந்த பல வழக்கறிஞர்கள் உள்ளனர். அவர்களை வாதாட ஏற்பாடு செய்ய வேண்டும்.

காவிரி விவகாரத்திற்காக வழக்கறிஞர்களுக்கு கர்நாடக அரசு ரூ.76 கோடியை செலவிட்டுள்ளது. அப்படியிருந்தும், கர்நாடகாவுக்கு தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டு வருகிறது. எனவே நாரிமனை உடனடியாக மாற்ற வேண்டும் என்றார்.
நாரிமனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை கர்நாடக பாஜகவினரால் தொடர்ந்து முன் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசுதான், அவரை நீடிக்க செய்து வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற, காவிரி விசாரணையின்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து தண்ணீர் திறக்காத கர்நாடகாவுக்கு ஆதரவாக தான் வாதிடப்போவதில்லை என பாதியிலேயே நாரிமன் உட்கார்ந்துவிட்டார். இது அவர் மீது கர்நாடக மக்களிடையேயும், அரசியல் தலைவர்களிடையேயும் அதிருப்தியை அதிகப்படுத்தியுள்ளது.
எனவே தமிழகத்திற்கு ஏதோ கொஞ்சம் தண்ணீரை திறந்துவிட்டு நாரிமனையும், சுப்ரீம் கோர்ட்டையும் மகிழ்விப்பதா அல்லது, நாரிமனுக்கு பதில் கபில் சிபலை வாதிட செய்வதா என கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.












Click it and Unblock the Notifications