திருமணமான பெண்களுக்கு ஒரு நன்மை கூட இல்லையே! கல்யாணம் எதுக்கு? பெண் எழுப்பிய கேள்வி! எழுந்த விவாதம்
டெல்லி: திருமணத்தால் பெண்களுக்கு என்ன நன்மை என்ற விவாதம் நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. இதற்கிடையே இப்போது ரெட்டிட் தளத்திலும் அந்த விவாதம் எதிரொலித்திருக்கிறது. அதில் திருமணத்தின் மூலம் பெண்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என ஒரு தரப்பு பட்டியலிட்டுள்ள நிலையில், மற்றொரு தரப்பு அதற்கு எதிரான லிஸ்ட்டை போட்டு வருகிறார்கள். இது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்த காலத்தில் நீங்கள் சமூக வலைத்தளத்தில் பார்த்தால் அதில் பல விவாதங்கள் நடந்து வரும். அதிலும் குறிப்பாக ரெட்டிட் தளத்தில் முக்கியமானது முதல் வினோதமானது வரை ஏகப்பட்ட விவாதங்கள் நடக்கும். ரெட்டிட் தளத்தில் ஒரு யூசரின் பெயர் உட்பட எந்தவொரு அடையாளமும் தெரியாது என்பதால் அதில் ஓபனாகவே பல விவாதங்கள் நடைபெறும்.

திருமணம்
அப்படியொரு விவாதம் தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அதில் இந்தியப் பெண்களுக்குத் திருமணத்தால் எதாவது நன்மை ஏற்படுமா என்று யூசர் ஒருவர் கேட்டிருந்தார். அதுவே மிகப் பெரிய விவாதமாக மாறியிருக்கிறது. ஒரு தரப்பினர் திருமணத்தால் ஏற்படும் நன்மைகளைப் பட்டியலிட்டுள்ள நிலையில், மற்றொரு தரப்பினர் திருமணத்தால் ஏற்படும் சிக்கல்களைப் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
ரிலாக்ஸாக இருப்பேன்
இது தொடர்பாக அந்த பெண், "நான் வேலைக்குப் போய் சம்பாதிக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம். எனக்குத் திருமணமாகவில்லை என்றால்.. நான் காலையில் ரிலாக்ஸாக அம்மா செஞ்சு தரும் ஒரு கப் டீயை குடித்துவிட்டு, பொறுமையாகக் காலை உணவைச் சாப்பிட்டுவிட்டு வேலைக்கு ரெடியாகி கிளம்புவேன். நாள் முழுவதும் ஆபீஸ் சென்று வேலை செய்வேன். ஆனால், அது முடிந்த பிறகு சில் செய்யலாம். அதேநேரம் திருமணம் செய்திருந்தால் சமையல், துணி துவைத்தல் என பல்வேறு சுமைகள் கூடிவிடும். எனக்கு மட்டுமின்றி குடும்பத்தினருக்கும் சுமை அதிகரிக்கும்.
நீங்கள் சம்பாதிக்கிறீர்கள் என்றால், சமையல் உட்பட வீட்டு வேலை செய்ய ஆள் வைக்கலாமா எனக் கேட்கலாம்.. ஆனால், அதற்கும் நான் தான் சம்பளம் தர வேண்டும். அதாவது யோசித்துப் பார்த்தால் கணவன் குடும்பம் வீட்டு வேலை செய்ய ஒரு பணிப் பெண்ணை என் மூலம் பெறுகிறது அல்லது என் சம்பளத்திலிருந்து பெறுகிறது. இதில் எனக்கு என்ன நன்மை? மேலும் நான் யாரென்றே தெரியாதவர்களுடன் சேர்ந்து வேறு வாழ வேண்டும்" எனப் பதிவிட்டிருந்தார்.
ஆதரவாகவும் எதிராகவும் குரல்
அவரது போஸ்ட் இணையத்தில் உடனடியாக டிரெண்ட் ஆனது. ஒரு தரப்பினர் அவர் திருமணம் குறித்து மிகத் துல்லியமான மதிப்பீடுகளைச் செய்துள்ளதாகப் பதிவிட்டுள்ளனர். மற்றொரு தரப்பினர் திருமணத்தால் சில நன்மைகளும் கூட இருப்பதாகப் பதிவிட்டு வருகிறார்கள்.
ரெட்டிட் யூசர் ஒருவர், "நீங்கள் திருமணத்திற்குப் பிறகு தனிக் குடித்தனமாக வாழ விரும்புகிறீர்கள் என்றால் அது நல்லது தான். அப்படி இருந்தால் யாரும் உங்களை அதிகாரம் செய்ய மாட்டார்கள். இருவரும் சம்பாதித்தால், வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்ளலாம். மேலும் இரட்டை வருமானத்தின் பலன்களையும் பெறலாம். இதில் இரு தரப்புக்கும் வெற்றி தான்" என்றார்.
தோழமை கிடைக்கும்
இன்னொரு பெண்ணும் கிட்டதட்ட அதே கருத்தைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், "அது நீங்கள் என்ன மாதிரியான திருமணத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து.. நீங்கள் ஆபீசுக்கு சென்று, வீட்டிற்கு வந்தும் தனியாக அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டி இருந்தால் அது பெரிய சிக்கல். உண்மையைச் சொல்ல வேண்டும் இந்தியத் திருமணங்களில் பெண்களுக்கு எந்த குறிப்பிடத்தக்க நன்மைகளும் இல்லை... இருப்பினும், உங்களுக்கு சப்போர்ட்டான துணை இருந்தால் திருமணம் அழகான ஒன்றாகும். உங்களுக்குத் தோழமையையும் உறுதியான ஆதரவும் கிடைக்கும்" எனப் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.. பெண்களுக்கு திருமணத்தால் நன்மை இருக்கா! இல்லை ரெட்டிட் யூசர்கள் சொல்வது போல சிக்கல் தானா என்பதை சொல்லுங்கள்!












Click it and Unblock the Notifications