மூன்றில் ஒரு மடங்கு பணம்தான் சப்ளையாகியுள்ளது.. புத்தாண்டிலும் பணத் தட்டுப்பாடு தொடரும்!
டெல்லி: வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பணம் எடுக்க நிலவும் கட்டுப்பாடு டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகும் தொடரும் என்று கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 8ம் தேதி பிரதமர் மோடி திடீரென புழக்கத்திலிருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பிழப்பதாக அறிவித்தார். டிசம்பர் 30ம் தேதிக்குள் பழைய ரூபாய் தாள்களை வங்கிகளில் டெபாசிட் செய்யலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து வங்கி மற்றும் ஏடிஎம்களில் இருந்து மக்கள் பணம் எடுக்கவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. வாரத்திற்கு ரூ.24 ஆயிரம்தான் வங்கிகளிலிருந்து எடுக்க முடியும் என்றும் பிற தேவைகளுக்கு ஆன்லைன், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
ஆனால் புத்தாண்டிலும் இதே நிபந்தனை தொடருமாம். ஏனெனில் நிபந்தனைகள் ஒரேயடியாக தளர்த்தப்பட்டால் குவியும் பணத் தேவையை பூர்த்தி செய்ய வங்கிகளிடம் போதிய ரூபாய் தாள்கள் இல்லை. இதை எஸ்.பி.ஐ வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியாவும் உறுதி செய்தார். எனவே நிபந்தனை படிப்படியாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நவம்பர் 9ம் தேதி முதல் டிசம்பர் 19ம் தேதிக்குள், ஆர்.பி.ஐ 5.92 லட்சம் கோடிகளை வங்கிகளுக்கு வினியோகித்துள்ளது. ஆனால் புழக்கத்திலிருந்து அகற்றப்பட்ட ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு ரூ.15.4 லட்சம் கோடி என்பது நினைவிருக்கலாம். எனவே 3ல் ஒரு பங்கு பண சப்ளையை வைத்து முழு தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது. கேஷ்லெஸ் மூலமாகவே பரிமாற்றங்கள் நடைபெற வேண்டியது வலுக்கட்டாயமாகத்தான் போகிறது.