நிதிஷை காட்டி மிரட்டிய காங்.! பீதியில் பணிந்த லாலு! 13 தொகுதிகளை ஒதுக்கினார்!!
டெல்லி: லோக்சபா தேர்தலில் பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கோரியபடி 13 தொகுதிகளை ஒதுக்கீடு செய்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இணைகிறது லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம்.
பீகார் மாநிலத்தில் காங்கிரஸ், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகியவை ஓரணியில் இருந்து வந்தன. அண்மையில் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு சிறையிலடைக்கப்பட்டார்.
இதன் பின்னரும் காங்கிரஸை லாலு பிரசாத் விட்டுவிடுவதாக இல்லை. அதே நேரத்தில் எதிர்வரும் லோக்ச்பா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் லாலு பிடிவாதமும் காட்டி வந்தார். ஆனால் பாஸ்வான் கேட்ட தொகுதிகளைக் கொடுக்கவில்லை.
இதனால் அவர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். அத்துடன் காங்கிரஸ் கட்சிக்கு 11 இடம்தான் ஒதுக்க முடியும் என்பதில் லாலு பிரசாத் உறுதியாகவும் இருந்து வந்தார். லாலுவின் இந்த தடாலடி நிபந்தனைகள் காங்கிரஸை வெறுப்பேற்றியது.
இதனால் முதல்வர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைக்கலாமா என்பது குறித்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் ஆலோசிக்க தொடங்கிவிட்டதாக செய்திகள் பரவின.
நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்தால் அவர் காங்கிரஸுடனான பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பார் என்றே கூறப்பட்டது. இதனால் லாலு ஆட்டம் கண்டுவிட்டார்.
நிதிஷ்குமாருடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் தமக்கு ஆப்பு என்று நினைத்து பீதி கண்ட லாலு இப்போது காங்கிரஸ் கேட்டபடி 13 தொகுதிகளை ஒதுக்க முன்வந்துவிட்டார்.
அத்துடன் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு இடம் ஒதுக்கீடு செய்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரிக்க முடியாத அங்கமாக, நிதிஷ்குமாரை நெருங்கவிடாதபடி ஐக்கியப்படுத்திக் கொண்டது ராஷ்டிரிய ஜனதா தளம்..