ஓகி புயலால் பாதித்த குமரி மாவட்டத்திற்கு கிடைத்த கவுரவம்.. இஸ்ரோ தலைவராக 'ராக்கெட் நாயகன்' சிவன்!
டெல்லி: இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்துக்காரரான கே.சிவன், ராக்கெட் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படுபவர். ஜனவரி 14ம் தேதியோடு இஸ்ரோ தலைவராக உள்ள கிரன்குமார் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், சிவன் பொறுப்பேற்கிறார்.
திருவனந்தபுரத்திலுள்ள, விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் இயக்குநராக இருக்கும் சிவன், கிரையோஜெனிக் என்ஜின் தயாரிப்பில் முக்கிய பங்காற்றியவர்.
அடுத்த 3 வருடங்களுக்கு, நாட்டின் உயரிய விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோவின் தலைவர் இவர்தான்.

104 செயற்கைக்கோள்களை ஏவியவர்
திரவ வாயுவை மிக குறைந்த வெப்பநிலையிலும் பயன்படுத்த கூடியவை கிரையோஜெனிக் எஞ்சின்கள். கடந்த பிப்ரவரியில், ஒரே முறை 104 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் ஏவிய திட்டத்தில் சூத்திரதாரியாக இருந்தவர் சிவன். செயற்கைக்கோள்களை வட்டப்பாதையில் எப்படி சரியாக நிலை நிறுத்துவது என்ற டெக்னாலஜியில் கை தேர்ந்தவராம் சிவன்.

சிவன் மகிழ்ச்சி
"ஜாம்பவான்கள் வகித்த இந்த பதவிக்கு நான் நியமிக்கப்பட்டு உள்ளது, எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. தாழ்மையோடு பதவியை ஏற்றுக்கொள்கிறேன். இந்தியாவுக்கும், இஸ்ரோவுக்கும் நான் என்னால் முடிந்த பணியையாற்றுவேன்" என்று நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார் சிவன்.

ராக்கெட் நாயகன்
சிவன், ராக்கெட் விஞ்ஞானத்தில் கைதேர்ந்தவர் என்பதால் அவரை ராக்கெட் நாயகன் என்றே இஸ்ரோ விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள். குமரி மாவட்டத்தை சமீபத்தில் ஓகி புயல் புரட்டி போட்ட நிலையில், அதே குமரி மாவட்டத்திலிருந்து புயலென கிளம்பியுள்ளார் சிவன். இஸ்ரோ அமைப்பின் தலைவராக பொறுப்பேற்கும் தமிழகத்தை சேர்ந்த முதல் விஞ்ஞானி இவர்தான் என்பதும் சிறப்பு.

பிரச்சாரமாக்கிட்டாங்களே
ஓகி புயல் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், குமரி மாவட்டத்தை சேர்ந்த சிவன், இஸ்ரோ தலைவராக்கப்பட்டுள்ளார். பாஜகவுக்கு செல்வாக்குள்ள குமரி மாவட்டத்தில், அக்கட்சி நிர்வாகிகளின் பிரச்சார ஆயுதமாக இதுவும் மாறிப்போயுள்ளதாம்.












Click it and Unblock the Notifications