2ஜி ஊழல்: ரூ10,000 கோடி லஞ்சப் பணம் சென்னை நிறுவனம் மூலமாக வெளிநாட்டுக்கு கடத்தல்– 'திடுக்' தகவல்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுடன் தொடர்புடைய நாட்டின் மிகப் பெரிய ஹவாலா நிதி மோசடியை அமலாக்கத் துறை கண்டுபிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 2ஜி முறைகேட்டில் தொடர்புடைய லஞ்சப் பணம் பல நாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டிருப்பதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த மோசடியில் தனியார் வங்கி ஒன்றுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் அடைந்த சில தனியார் நிறுவனங்கள் அதற்கு பிரதிபலனாக, அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ. ராசாவுக்கு லஞ்சம் வழங்கியதாகவும், இந்தப் பணம் ராசா சார்ந்த திமுக ஆதரவு கலைஞர் தொலைக்காட்சி மூலம் வழங்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
ரா உளவு அமைப்பு அறிக்கை
சர்வதேச உளவு விவகாரங்களை கவனிக்கும் இந்திய அமைப்பான "ரா' 2ஜி விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு 2012-13 ஆண்டில் அறிக்கை அளித்தது. அதில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் ஆதாயம் அடைந்த நிறுவனங்கள் அதற்கு பிரதிபலனாக துபாய், ஹாங்காங் போன்ற நாடுகளில் உள்ள சில நிறுவனங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கான லஞ்சத்தை அளித்ததாகக் குறிப்பிட்டிருந்தது.
தனியார் கட்டுமான நிறுவனம்
இதற்கு சென்னையைச் சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவனம் உதவியதாகக் கூறப்பட்டது. இதன் உண்மைத்தன்மை பற்றி விசாரித்து வருகின்றனர். அகமதாபாத்தைச் சேர்ந்த அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சூரத்தைச் சேர்ந்த வைர நிறுவனங்களின் ஹவாலா மோசடி குறித்து நடத்திய விசாரணையின்போது 2ஜி முறைகேட்டில் பெறப்பட்ட லஞ்சப் பணம் வெளிநாடுகளுக்குச் சென்றது தெரிய வந்ததாக கூறப்படுகிறது.
வைர வியாபாரிகள் கைது
இந்நிலையில் அகமதாபாத்தைச் சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் அண்மையில் ஹவாலா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடையதாக அஃப்ரோஸ் ஃபட்டா, மதன் லால் ஜெயின், மணீஷ் ஷா, ராகேஷ் கோத்தாரி ஆகிய ஹவாலாவில் ஈடுபடும் நபர்களும் கைது செய்யப்பட்டனர்.
தேடுதல் வேட்டை
ஹவாலா மோசடியில் ஈடுபட்ட மன்சூக் லால் சங்வி, தீரஜ் ஜெயின் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இவர்களுக்கு மூளையாக இருந்து செயல்பட்ட பிருத்விராஜ் கோத்தாரி என்பவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நபர்கள் பிடிபட்டால் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வெளிநாடுகளில் ஹவாலா மோசடி நடந்துள்ளதை நிரூபிக்க முடியும் என்றும் பல்வேறு உண்மைகள் வெளி வரும் என்றும் அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.