சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுப்பு தொடரும் - தேவசம் போர்டு திட்டவட்டம்
திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு தொடந்து அனுமதி கிடையாது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள பிரசிதிபெற்ற ஐயப்பன் கோயிலில் பருவம் அடையாத சிறுமிகளும், மாதவிலக்கு பருவத்தைத் தாண்டிய பெண்களும் மட்டுமே தரிசனம் செய்ய முடியும் என்பது மரபு ரீதியாக கடைப்பிடிக்கப்படும் வழக்கம்.
இந்நிலையில், இந்திய இளம் வழக்கறிஞர்கள் சங்கம், உச்சநீதிமன்றத்தில், பொதுநல மனுத்தாக்கல் செய்தனர். அதில் 'சபரி மலையில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, என்.வி.ரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிமலையில் பெண்களை அனுமதிப்பதில் என்ன தவறு? என்று கேள்வி எழுப்பியதோடு, அரசியல் அமைப்பு சட்டத்தில் ஆண், பெண் வித்தியாசம் கிடையாது என்றும், கடவுளுக்கு முன்பு அனைவரும் சமம் என்றும் கருத்து தெரிவித்தது.
மேலும் இது தொடர்பாக கேரள அரசும், சபரிமலை ஐய்யப்பன் கோயிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டும் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கேரள அரசு இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கோயிலின் ஆச்சாரங்களில் தலையிட விரும்பவில்லை என்றும் ஒருவரின் மத நம்பிக்கையில் குறுக்கிடுவது தவறு என்றும் கூறி இருந்தது.
தேவசம் போர்டு அளித்த அறிக்கையில், காலம் காலமாக கோவிலில் கடைபிடிக்கப்படும் ஆச்சார விதிகளில் தலையிட முடியாது என்று தெரிவித்தது.
இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் ஆச்சாரியர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருவிதாங்கூர் தேவசம் போர்டின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் தந்திரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் புனிதத்தை காக்கும் பொருட்டு, மாதவிடாய் ஏற்படும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
எனினும் பருவம் அடைவதற்கு முன், 10 வயது வரையிலும், மாதவிடாய் நின்றபின் 50 வயதுக்கு மேற்பட்டும் பெண்கள் சபரிமலைக்கு வர அனுமதிக்கப்படுவர் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்றும் அவர்கள் கூறினர்.