சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தியாக அனீஸ் நியமனம்
சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேல்சாந்தியாக கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்த அனீஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோயிலின் மேல்சாந்தியாக கொல்லம் மாவட்டம் மைநாகப்பள்ளியைச் சேர்ந்த அனீஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.
சபரிமலை ஐயப்பன் கோயில் மற்றும் மாளிகைப்புரத்து அம்மன் கோயில் மேல்சாந்திகள் ஆண்டுதோறும் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயில் மேல்சாந்தி உண்ணிகிருஷ்ணன் நம்பூதிரியின் பொறுப்பு ஐப்பசி மாத பூஜைகளுடன் நிறைவு பெறுகிறது.
கார்த்திகை முதல் தேதியில் இருந்து புதிய மேல்சாந்திகள் பொறுப்பு ஏற்கவேண்டும்.
இதையொட்டி புதிய மேல்சாந்திகளை தேர்வு செய்ய திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நடவடிக்கை மேற்கொண்டு, அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இதில் சபரிமலை அய்யப்பன் கோயில் மேல்சாந்தி பொறுப்புக்கு 67 பேரும், மாளிகைப்புரத்து அம்மன் கோயிலுக்கு 44 பேரும் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கு நேர்முக தேர்வு கடந்த 5, 6-ஆம் தேதிகளில் நடந்தது. இதில் சபரிமலை மேல்சாந்திக்கு விண்ணப்பித்திருந்தவர்களில் 14 பேரும், மாளிகைப்புரத்துக்கு 12 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் இருந்து தலா ஒருவர் இன்று குலுக்கல் முறையில் புதிய மேல்சாந்திகள் தேர்வு நடைபெற்றது. மேல்சாந்திகளை பந்தள குழந்தைகள் தேர்வு செய்வது வழக்கம். குலுக்கி வைத்திருக்கும் சொம்பிலிருந்து எடுப்பர். அதன்படி 2017-2018-ஆம் ஆண்டு நவம்பர் 15 வரை உள்ள காலத்திற்கான மேல்சாந்தியாக கொல்லம் மைநாகபபள்ளியை சார்ந்த அனீஸ் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.