'சாய்வாலா' மோடி அமைச்சரவையில் ஒரு 'பிளம்பர்'...!
சன்டிகர்: மோடி அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள விஜய் சம்ப்லா பிளம்பராக இருந்து அமைச்சராக உயர்ந்துள்ளார்.
சிரோமணி அகாலிதளம் தலைவர் ஹர்சிம்ரத் கவ்ர் பாதலை அடுத்து பஞ்சாபில் இருந்து மோடி அமைச்சரவையில் சேர்ந்துள்ள தலித் தலைவர் விஜய் சம்ப்லா(53).
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த லோக்சபா தேர்தலில் விஜய் பஞ்சாப் மாநிலம் ஹோசியார்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். முன்னதாக அவரது தந்தை இறந்த பிறகு விஜய் மற்றும் அவரது சகோதரர் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து விஜய் 1979ம் ஆண்டு சவுதி அரேபியா சென்று தம்மாமில் உள்ள நிறுவனம் ஒன்றில் பிளம்பராக பணியாற்றினார்.
3 ஆண்டுகள் அவர் தம்மாமில் பணியாற்றினார். பிளம்பராக துவங்கி பின்னர் தொழிலில் பார்ட்னராக உயர்ந்தார். அதன் பிறகு இந்தியா திரும்பிய அவர் தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடினார். 1997ம் ஆண்டு அவர் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சோபி கிராமத்தின் முதல் தலித் பஞ்சாயத்து தலைவர் ஆனார்.
அதில் இருந்து அவர் படிப்படியாக உயர்ந்தார். பஞ்சாப் காதி போர்டின் தலைவராக ஆனார். மேலும் பஞ்சாப் மாநில பாஜக துணை தலைவர் பதவியை பெற்றார். விஜய் பதவியேற்பதை பார்க்க சன்டிகரில் ஃபேஷன் டெக்னாலஜி படிக்கும் அவரது 20 வயது மகள் பேருந்தில் பயணம் செய்து டெல்லி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் சம்ப்லா சமூக நீதி மற்றும் மேம்பாட்டு துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.