சிறை அதிகாரிகளுக்கு சசிகலா ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம்.. விசாரிக்க உத்தரவு
சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரூ: சிறை அதிகாரிகளுக்கு சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரம் தொடர்பாக விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ளனர். இதனால் கடந்த ஓராண்டாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து தரப்பட்டு இருந்தன. இது தொடர்பாக சிறையில் ஆய்வு நடத்தி டி.ஐ.ஜி. ரூபா அறிக்கையை சிறைத்துறை டி.ஜி.பி. சத்தியநாராயண ராவிடம் தாக்கல் செய்து இருந்தார்.
டிஐஜி ரூபா குற்றச்சாட்டு
இந்த அறிக்கை மீது அவர் நடவடிக்கை எடுக்காததால் சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தர டி.ஜி.பி. சத்தியநாராயண ராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியதாக டி.ஐ.ஜி. ரூபா குற்றம்சாட்டியிருந்தார்.
கர்நாடக அமைச்சர்
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய் குமார் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி செய்தியாளர்களிடம் பேசினார்.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும்
அப்போது சசிகலா சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது குறித்து தீவிரமாக விசாரிப்பது அவசியம் என அவர் கூறினார். சிறை அதிகாரிகளுக்கு சசிகலா லஞ்சம் கொடுக்க முயன்ற புகார் பற்றி மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என்றும் அவர் கூறினார்.
அறிக்கை தாக்கல் செய்யப்படும்
மேலும் விசாரணைக்கு கால அவகாசம் ஏதும் கொடுக்கப்படவில்லை என்று கூறிய அமைச்சர் இதுகுறித்து விசாரித்து முடித்ததும் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.