ஜெயலலிதாவுடன் சிறையில் இருந்து வீடு திரும்பும் சசிகலா, இளவரசி, சுதாகரன்
பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகாலம் சிறைதண்டனை பெற்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து 21 நாள் சிறைவாசத்திற்குப் பின்னர் வீடு திரும்ப தயாராகிவருகின்றனர்.
பெங்களூர் தனிநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவரது உறவினர்கள் சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடியும் அபராதமாக விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மேல்முறையீட்டு மனுக்கள்
இதுதவிர தனிநீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும் தண்டனையை நிறுத்தி வைக்க வலியுறுத்தியும் தங்கள் சொத்துகளை விடுவிக்க வேண்டும் என்று கோரியும் தனித்தனியாக 4 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
கர்நாடக உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டதால் ஜெயலலிதா சார்பில் 9ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
அக்டோபர் 10ஆம் தேதி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரின் சார்பில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி சார்பில் மூத்த வழக்கறிஞர் சுஷில் குமார் ஆஜராகி, அவர்களுடைய ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணைக்கான வேண்டுகோளை முன்வைத்தார். இந்த வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், நேற்று விசாரணைக்கு தேதி குறித்து உத்தரவு பிறப்பித்தனர்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இந்த விசாரணை நடைபெற்றது. இந்த அமர்வில் நீதிபதிகள் மதன் லோகுர், சிக்ரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. தண்டனையயும் நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை தற்காலிகமாக நிறுத்திவைத்து நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் உத்தரவிட்டது.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி சனிக்கிழமையன்று சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உடன் சிறைக்குப் போன சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் 21 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் சனிக்கிழமையான இன்று வீடு திரும்புகின்றனர்.