சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள்- சிறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ.10 லட்சம் லஞ்சம்: குமாரசாமி புது குண்டு
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 10 லட்சம் லஞ்சமாக தரப்பட்டுள்ளது
பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கிட சிறைத்துறை அதிகாரிகளுக்கு மாதம் ரூ. 10 லட்சம் லஞ்சமாக தரப்பட்டுள்ளது என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி புதிய புகார் தெரிவித்துள்ளார். மேலும் அவர், அதற்கான ஆதாரங்களை வெளியிடப் போவதாகவும் கூறியுள்ளது அதிமுகவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக, கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மாநில தலைவருமான குமாரசாமி நேற்று பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
" கர்நாடகாவில் சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டுள்ளதைப் போலவே, சிறைக்கு உள்ளேயும் நிலைமை மோசமாக உள்ளது. டிஐஜி ரூபா டி. மவுட்கில் தெரிவித்துள்ள அனைத்து புகார் தொடர்பாகவும் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும்.
பெங்களூரு சிறையில் அடைக்கப் பட்டுள்ள பணக்கார கைதிகளிடம் அதிகாரிகள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவது தொடர்கதையாகி வருகிறது. சசிகலாவுக்கு சிறப்பு சலுகை வழங்க அதிகாரிகள் ரூ.2 கோடி மட்டும் லஞ்சம் வாங்கவில்லை.
மாறாக மாதந்தோறும் ரூ.10 லட்சம் என்ற அளவில் லஞ்சம் வாங்கியுள்ளனர். சசிகலாவைப் பார்க்க வரும் ஒவ்வொரு பிரமுகரிடமும், ஒவ்வொரு முறையும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சம் வாங்குகின்றனர்.
இந்த விவகாரம் ஊடகங்களில் அவ்வப்போது வெளியாகி இருக்கிறது. தற்போது ஆதாரத்தோடு புகார் கூறியுள்ள பெண் டிஐஜி ரூபா டி. மவுட் கில் மீது துறை சார்ந்த குற்றச்சாட்டை எழுப்புவது நியாயம் அல்ல.
உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, விசாரணை முடியும் வரை இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளும் நீண்ட விடுப்பில் செல்ல அரசு வலியுறுத்த வேண்டும். அப்போது தான் இந்த விசாரணையால் உண்மையைக் கண்டறிய முடியும்.
இல்லாவிட்டால் அதிகாரிகள் அனைத்து ஆதாரங்களையும் அழித்து விடுவார்கள். சசிகலா தரப்பிடம் அதிகாரிகள் லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாக எனக்கு சில ஆதாரங்கள் கிடைத்துள்ளது. தேவைப்பட்டால் விசாரணை அதிகாரியை நேரில் சந்தித்து ஆதாரங்களை அளிப்பேன். இல்லாவிட்டால் ஊடகங்களில் வெளியிடுவேன்." என்று தெரிவித்துள்ளார்.
Recommended Video
டிஐஜி ரூபா கூறிய புகார்களுக்கே அதிர்ச்சியில் உறைந்துபோயுள்ள அதிமுக, குமாரசாமியும் அதிரடி புகார்கள் தெரிவித்துள்ளதால் மேலும் ஸ்தம்பித்துப் போயுள்ளது என்று கூறப்படுகிறது.