லஞ்சம், சிறை விதிமுறை மீறல்.. சசிகலா மீது பாய்கிறது புது வழக்குகள்?
பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக ஐபிஎஸ் அதிகாரி தாக்கல் செய்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறை விதிகளை வளைத்ததற்காக சசிகலா மீது கூடுதலாகக வழக்கு தொடரப்படுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா ஏற்கனவே சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருடம் சிறை தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சிறைத்துறை டிஐஜியான ரூபா, கர்நாடக டிஜிபி ஆர்.கே.தத்தாவுக்கு, சிறைத்துறை டிஜிபி ஹெச்.எஸ்.சத்யநாராயண ராவ் மற்றும் சிறை அதிகாரிகள் குறித்து குற்றம்சாட்டி எழுதியுள்ள அறிக்கை வடிவிலான 4பக்க கடிதத்தில்தான் இந்த தகவல்கள் உள்ளன.
போலீசார் நாடகம்
ஏற்கனவே, சிறையில் அடைக்கப்பட்ட நாள் முதல், சசிகலா அளவுக்கு அதிகமான நபர்களை சிறையில் சந்திக்க விதிமுறைகளை வளைத்து அதிகாரிகள் சலுகை காட்டுவதாக செய்தி வெளியானது. செய்தி வெளியான பிறகு அதில் கொஞ்சம் கெடுபிடி காட்டுவதை போல காட்டிக்கொண்டனர் போலீசார். ஆனால், உள்ளுக்குள் இவ்வளவு பெரிய ஊழல் நடந்துள்ளது இப்போது அம்லமாகியுள்ளது.
முக்கிய புள்ளி
இதற்கெல்லாம் கர்நாடகாவை சேர்ந்த சசிகலா விசுவாசி ஒருவர்தான் ஏற்பாடு செய்து கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நபருக்கு கர்நாடகாவிலுள்ள போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் நன்கு பழக்கம். எனவே சசிகலா தரப்பில் பணத்தை பெற்று, அதிகாரிகளுக்கு வினியோகம் செய்து அவர்களை சரிகட்டும் வேலையில் அந்த புள்ளி ஈடுபட்டுள்ளார்.
சமாளிப்பு
பத்திரிகை செய்தி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க முடியாது என சப்பைகட்டு கட்டி சமாளித்த கர்நாடக அரசு, டிஐஜி அறிக்கைக்கு பிறகாவது உறுதியான நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வழக்கு
மேலும், சசிகலா மீது சிறை விதிகளை வளைத்தது, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர தமிழக எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரப்படுமா, அல்லது கண்டுகொள்ளாமல் வளைந்து கொடுப்பார்களா என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியுள்ளது.