'10 வருட திருமண உறவு ஓவர்' - திரிணாமுல் காங்.கில் சேர்ந்த மனைவியை டைவர்ஸ் செய்யும் பாஜக எம்பி!
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அம்மாநில பாஜக எம்பி செளமித்ரா கான்.
மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜியை இம்முறை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக செயல்பட்டுவருகிறது. இதற்காக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளையும் எடுத்துவருகிறது.
பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
நேற்று மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மிட்னாபூர் மாவட்டத்தில் மாபெரும் பேரணி நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் சுவேந்து ஆதிகாரி உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர். அவர்களில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைப் பல எம்பிகள், எம்எல்ஏகளும் அடக்கம்.
மம்தாவுக்கு ஷாக் கொடுத்த பாஜக
இதைச் சற்றும் எதிர்பார்க்காத மம்தா பானர்ஜி ஆடிப் போனார், நிலைமையைச் சமாளிக்க அவசர கூட்டத்தையும் கூட்டினார். பாஜகவின் இந்த அதிரடி ஆக்ஷனுக்கு மம்தா பானர்ஜி என்ன பதிலடி தரப்போகிறார் என்று பலரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது இன்று காலை யாருமே எதிர்பார்க்காத அறிவிப்பு ஒன்று வெளியானது.
திருப்பியடித்த திதி
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் இளைஞரணியான யுவ மோர்ச்சா தலைவருமான சவுமித்ரா கானின் மனைவி சுஜாதா மொண்டல் கான் இன்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்த அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் பஷ்ணுபூர் தொகுதியில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்றவர் சவுமித்ரா கான்.
தொகுதிக்குள் நுழையத் தடை
இருப்பினும், கிரிமினல் வழக்கு தொடர்பான விசாரணை காரணமாக 2019 தேர்தலின்போது அவரது சொந்த தொகுதிக்குள்ளே நுழைய நீதிமன்றம் தடை விதித்தது. இப்போது ஒற்றை ஆளாக சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு தனது கணவரை வெற்றிபெற வைத்தவர் சுஜாதா மொண்டல் கான். இவருக்கு என தொகுதியில் தனிச் செல்வாக்கும் உள்ளது.
'மரியாதை கிடைக்கவில்லை'
இந்த நிலையில் அதிரடியாக திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளார் சுஜாதா. தனக்கு மரியாதை அளிக்காததாலேயே தான் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்துள்ளதாக சுஜாதா மொண்டல் கான் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், "எனக்கு மரியாதை வேண்டும். நான் ஒரு திறமையான கட்சியின் தலைவராக இருக்க விரும்புகிறேன். அன்பான எனது தீதியுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்.
பாஜகவின் தாக்குதல்
புதிதாக பாஜவில் இணைந்துள்ளவர்கள் அனைவரும் தவறான தலைவர்கள், ஊழல்வாதிகள். ஆனால் துர்திஷ்டவசமாக அவர்களுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின்போது பல்வேறு தாக்குதல்கள் என்னைக் கூறி வைத்து நடத்தப்பட்டன. ஆனால், அதையெல்லாம் தாங்கி, பல தியாகங்களைச் செய்து எனது கணவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பினேன். ஆனால், பதிலுக்கு எனக்கு ஒன்னும் கிடைக்கவில்லை" என்று சரமாரியாகத் தனது விமர்சனங்களை முன்வைத்தார்.
10 ஆண்டுகால திருமண உறவை முடித்த அரசியல்
இந்நிலையில் சுஜாதா மொண்டல் கானின் சரமாரியான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்கும் வகையில் சவுமித்ரா கான் இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "எங்கள்10 ஆண்டுகால திருமண உறவுக்கு அரசியல் முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. சுஜாதா மொண்டல் கானுக்கு டைவர்ஸ் அளிக்க முடிவு செய்துள்ளேன். இனிமேல் நான் முன்பைவிட அதிகமாக பாஜகவுக்கு உழைப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
'ஒரு நாள் உணர்வார்'
சவுமித்ரா கானின் விவாகரத்து அறிவிப்பு குறித்து பேசிய சுஜாதா மொண்டல் கான், "அவர் என்ன செய்கிறாரோ அது அவரது விருப்பம். ஆனால், ஒரு நாள் அவர் தனது தவறுகளை உணர்வார். யாருக்குத் தெரியும், ஒரு நாள் அவர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலேயே சேர விரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்றார்.