ஜெ. சொத்து குவிப்பு வழக்கு: அப்பீல் மனு மீதான விசாரணை மார்ச் 10-க்கு ஒத்திவைப்பு!
டெல்லி: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மார்ச் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தார் பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா. ஆனால் மேல்முறையீட்டு விசாரணையில் ஜெயலலிதாவை விடுதலை செய்தார் கர்நாடகா உயர்நீதிமன்ற தனிநீதிபதி குமாரசாமி.
ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசும் திமுக பொதுச்செயலர் அன்பழகனும் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை முதலில் பிப்ரவரி 2-ந் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இம்மனுவை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான பினாக்கி சந்திரகோஷ், அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதால் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி ஜெயலலிதா தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை பிப்ரவரி 23-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதனடிப்படையில் கடந்த 23-ந் தேதி விசாரணை தொடங்கியது. அப்போதும் கூட இவ்வழக்கின் விசாரணையை 1 வார காலத்துக்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா தரப்பு அவகாசம் கோரியது. ஆனால் நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வாராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை நிராகரித்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக கர்நாடகா அரசின் இறுதிவாதம் முன்வைக்கப்பட்டு வந்தது. ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிராக கர்நாடகா அரசு சார்பாக மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே வாதங்களை முன்வைத்து வந்தார். இன்று 3-வது நாளாக இறுதிவாதத்தை துஷ்யந்த் தவே முன்வைக்க இருந்தார்.
இன்றைய விசாரணையின் போது அனைத்து தரப்பும் சாட்சிகள் பட்டியலை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். மேலும் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரனின் திருமண செலவு குறித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பில் உள்ள குளறுபடி குறித்து விளக்கம் அளிக்கவும் கர்நாடகா அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை மார்ச் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து தரப்பும் ஆதாரங்கள், சாட்சிகள், விசாரணை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு விவரங்களை ஒட்டுமொத்தமாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேபோல் கர்நாடகா அரசு தமது இறுதிவாதத்தை மார்ச் 10-ந் தேதியன்று முன்வைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களாக தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை 4 வார காலத்துக்குள் முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுவிடும் என உச்சநீதிமன்ற வட்டாரங்கள் கூறின. அதாவது தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலுக்கு முன்னதாக இவ்வழக்கில் தீர்ப்பு வந்துவிடும் எனவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது மார்ச் 10-ந் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் இவ்வழக்கு விசாரணை மேலும் தாமதமாகும் என தெரிகிறது.