தமிழக அரசுக்கு தொடர் 'ஷாக்'- நில அபகரிப்பு கோர்ட்டுக்கான தடையையும் நீட்டித்தது சுப்ரீம் கோர்ட்!!
டெல்லி: பாடகர் கோவன் வழக்கு, விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு ஆகியவற்றில் தமிழக அரசுக்கு குட்டு வைத்த உச்சநீதிமன்றம், நில அபகரிப்பு நீதிமன்றங்களுக்கான தடையையும் நீட்டித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் பாடகர் கோவனை காவலில் வைத்து விசாரிக்க கோரும் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. இந்த மனுவை உச்சநீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்தது.

அதேபோல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தாக்கல் செய்த அவதூறு வழக்குகளுக்கு தடை கோரும் மனு மீதும் விசாரணை நடைபெற்றது. இந்த மனு மீதான விசாரணையில் தமிழக அரசை கடுமையாக சாடியது உச்சநீதிமன்றம். மேலும் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகள் மீதான விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையையும் நீட்டித்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
இதனைத் தொடர்ந்து நில அபகரிப்பு புகார்களை விசாரிக்கும் தனி நீதிமன்றம் தொடர்பான விசாரணையும் உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. அதாவது நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிநீதிமன்றங்களை தமிழக அரசு அமைத்தது. இதை எதிர்த்து தி.மு.க.வை சேர்ந்த தாமரைச் செல்வன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசின் தனிநீதிமன்றங்களுக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள், தனிநீதிமன்றங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டித்து உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தில் இன்று ஒரே நாளில் 3 வழக்குகளில் தமிழக அரசு பலத்த பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications