எப்.எம். ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்திற்கு அனுமதி ஏன்? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: பொருளாதார குற்றத்தில் பெயர் அடிபடும் நிறுவனத்திற்கு எப்.எம் ரேடியோ பண்பலை ஏலத்தில் பங்கேற்க அனுமதி தந்தது ஏன் என்று கேட்டு சுப்ரீம் கோர்ட், மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தனியார் பண்பலை வானொலி சேவைக்கான மூன்றாம் கட்ட ஏலத்தில் கடந்த ஆண்டு பங்கேற்ற சன் குழும நிறுவனங்களுக்கு பாதுகாப்பு தணிக்கை சான்றிதழ் அளிக்க மத்திய உள்துறை ஆட்சேபம் தெரிவித்திருந்தது. அந்நிறுவனங்களுக்கு பண்பலை சேவை வழங்குவது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் என்று உள்துறை கூறியிருந்தது.

சன் டிவி நிறுவனத்தில் அக்குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் 75 சதவீத பங்குகளை வைத்துள்ளார். அவர் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றம் மேற்பார்வையிட்டு வருகிறது.
இந்த விவகாரத்தில் பண்பலை வானொலி சேவைக்கான ஏலத்தில் சன் குழும நிறுவனங்கள் பங்கேற்க டெல்லி, சென்னை உயர் நீதிமன்றங்கள் அளித்த அனுமதியை எதிர்த்து அந்நீதிமன்றங்களின் "டிவிஷன்' அமர்வில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று மத்திய உள்துறை பரிந்துரை அளித்தது.
பணப் பரிவர்த்தனை மோசடி, நிதி முறைகேடு போன்ற தீவிர பொருளாதார குற்றங்களில் தனியார் நிறுவன நிர்வாகிகள் குற்றம்சாட்டப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு வானொலி உள்ளிட்ட ஒலிபரப்பு சேவை நடத்துவதற்கு அனுமதி மறுக்க மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு அதிகாரம் உள்ளது.
இதை வலியுறுத்தி மத்திய தகவல் ஒலிபரப்புத் துறைக்கு கடந்த ஆகஸ்ட் 13, செப்டம்பர் 8 ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை கடிதங்கள் அனுப்பியுள்ளது. வேறு குற்ற வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டிருந்த ஊடக நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் தண்டனை விதிக்காத நிலையிலும் அவர்கள் அங்கம் வகித்த நிறுவனங்களான "பாஸிடிவ் டிவி', ஃபோகஸ் டிவி போன்றவற்றின் உரிமையை மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை ரத்து செய்துள்ளது. சன் குழும நிறுவனங்கள் விவகாரத்திலும் அதே நிலைப்பாட்டை எடுக்காமல் அவற்றுக்கு சாதகமாக செயல்படுவது ஏன்? என்று சுப்பிரமணியன் சுவாமி மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடுவிற்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.
இதேபோல சுப்ரீம் கோர்ட்டிலும் சு.சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், எப்.எம். ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்க அனுமதித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக தனது வாதத்தின்போது, "உள்துறை அமைச்சகம் முதலில் மறுப்பு தெரிவித்த நிலையில், இதுதொடர்பான வழக்கில், மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி திடீரென நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, ஏலத்தில் பங்கேற்க ரெட் எப்.எம்முக்கு அனுமதி வழங்கலாம் என கருத்து கூறினார்" என குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications