குஜராத் ராஜ்யசபா தேர்தலில் நோட்டா அறிமுகத்திற்கு தடை இல்லை.. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு
டெல்லி: குஜராத் ராஜ்யசபா தேர்தலில் நோட்டாவை அறிமுகம் செய்ய இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தடை கோரி காங்கிரஸ் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
குஜராத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால் அம்மாநில அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், ராஜ்யசபா தேர்தலில் 'நோட்டா' இடம் பெறும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. மத்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கும் அபாயம் இதனால் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. மேலும் தனது 44 எம்எல்ஏக்களை அக்கட்சி கர்நாடகாவிலுள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளது.
நோட்டா' முறை அறிமுகம் செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் கட்சியின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. எனினும், சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி, தேர்தல்களில், 'நோட்டா' பயன்பாடு, ஏற்கனவே அமலுக்கு வந்துவிட்டதாகவும், ராஜ்யசபா தேர்தலில், அந்த முறையை பயன்படுத்துவ தில் எந்த தவறும் கிடையாது என்றும், தேர்தல் கமிஷன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றது. அப்போது, 2014ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் பிறகு, மாநிலங்களவை தேர்தலில் நோட்டா இடம் பெறும் முறை குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டதை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்றம், இப்போது ஏன் காலதாமதமாக இதை எதிக்கிறீர்கள் என கேள்வி எழுப்பியது. இதையடுத்து, நோட்டா அறிமுகத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டது நீதிமன்றம். ஆகஸ்ட் 8ம் தேதி குஜராத் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.