ஜம்மு - காஷ்மீரில் ஆளுநர் ஆட்சிக்கு சுப்ரீம் கோர்ட் 'நோ'... மத்திய அரசிடம் அறிக்கை கேட்கிறது
டெல்லி: கலவரம் பாதித்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் ஆட்சிக்கு உத்தரவிட விடுக்கப்பட்ட கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. அதேநேரம், மாநில நிலவரம் குறித்த விவர அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் ஜம்மு காஷ்மீரில் கலவரம் வெடித்தது. மக்கள் இயல்பு வாழ்க்கை இதனால் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் சிறுத்தைகள் கட்சி தலைவர் பீம் சிங், சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், காஷ்மீரில் கலவரத்தை கட்டுப்படுத்துவதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதால், ஆளுநர் ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
காஷ்மீரில் மருந்து பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், ஆளுநர் ஆட்சிக்கு உத்தரவிடுவது அவசியம் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் ஆளுநர் ஆட்சிக்கு உத்தரவிட முடியாது என்று கூறியுள்ள உச்சநீதிமன்ற பெஞ்ச், மத்திய அரசு முழு அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.