ஜல்லிக்கட்டு: விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு சுப்ரீம்கோர்ட் தடை!
டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்ததற்கு விளக்கம் கோரி விலங்குகள் நல வாரியத்துக்கு மத்திய அரசு அனுப்பிய நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
2014-ம் ஆண்டு மே மாதம் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் கடந்த ஆண்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசும், அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு கடந்த ஜனவரி 7-ந் தேதி அனுமதி வழங்கி அறிவிக்கை வெளியிட்டது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்ற நிலையில் மத்திய அரசின் அறிவிக்கையை ரத்து செய்யக்கோரி இந்திய விலங்குகள் நலவாரியம் உள்ளிட்ட சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இதனடிப்படையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்தது. இதனிடையே மத்திய அரசின் அறிவிக்கைக்கு எதிராக நீதிமன்றம் சென்றதற்காக விலங்குகள் நல வாரியம் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் விலங்குகள் நலவாரியத்துக்கு நோட்டீஸ்அனுப்பியது. மிருகவதை தடை சட்டத்தின் அடிப்படையில் நிறுவப்பட்ட இந்த வாரியம், மிருகங்கள் கொடுமைப்படுத்தப்படுவதற்கு எதிராக வழக்கு தொடுத்தது. அரசுக்கு எதிராக இந்த நடவடிக்கை அமையவில்லை என்று பதில் அளித்தது.
மேலும் விலங்குகள் நலவாரியத்தின் உறுப்பினர் என்.ஜெயசிம்மா, உச்சநீதிமன்றத்தில் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணை நீதிபதிகள் தீபக்மிஸ்ரா, சிவகீர்த்திசிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விசாரணையின் முடிவில் மத்திய அரசின் நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications