கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு தகுதி சான்றிதழ் கிடையாது: கேரள அரசு கறார்
திருவனந்தபுரம்: அடுத்த கல்வி ஆண்டு முதல் கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு தகுதி சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது என கேரளா அரசு அறிவித்துள்ளது.
நாட்டு மக்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் அனைவருக்கும் கழிவறை செய்து தர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில், இன்று நடைபெற்ற கேரள மாநில சட்டசபைக் கூட்டத்தில் கேரள பள்ளிகளில் கழிவறை வசதி செய்து தருவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு முதல் போதிய கழிவறைகள் இல்லாத பள்ளிகளுக்கு தகுதிச் சான்றிதழ் தரப்பட மாட்டாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி கூறியதாவது:-

கட்டாய கழிப்பறை வசதி...
பள்ளிகளில் கட்டாய கழிப்பறை வசதியை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. பள்ளியின் கட்டங்களின் பாதுகாப்பை அறிந்து இதுவரையில் பள்ளிகளுக்கு சான்றிதழ் அளிக்கப்படுகிறது.

கூடுதல் பாதுகாப்பு...
ஆனால், அடுத்த கல்வி ஆண்டு முதல் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்படும். கழிவறை வசதியும் அதில் கட்டாயமாக்கப்படும். இத்தகையை வசதிகள் இல்லாத பள்ளிகளில் அடுத்து கல்வி ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்படாது.

அடுத்த 100 நாட்கள்...
இதுவரையில் 196 அரசு பள்ளிகளில் கழிவறைகள் இல்லை. அடுத்த 100 நாட்களில் அத்தகைய வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

அரசு உதவி பெறும் பள்ளிகள்...
இதேபோல் மாநிலத்தில் 1011 அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிவறை வசதி இல்லை. அடுத்த கல்வி ஆண்டுக்குள் அரசு உதவிபெறும் பள்ளிகளும் கழிவறை வசதிகளை சொந்த செலவில் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications