உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு... டேராடூனுக்கு விரைந்த ஆராய்ச்சியாளர்கள்
டேராடூன்: உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள டிஆர்டிஓ-வின் ஆராய்ச்சியாளர்கள் குழு தற்போது டேராடூனுக்கு விரைந்துள்ளனர்.
உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்திலுள்ள நந்த தேவி பனிப்பாறைகளில் ஒரு பகுதி திடீரென்று நேற்று உடைந்து விழுந்தது. இதனால் அப்பகுதிகளில் உள்ள நதிகளில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இந்த வெள்ளப் பெருக்கால் தவுலிகங்கா நதியின் அருகிலுள்ள குடியிருப்புகள் முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. வெள்ள நீர் தொடர்ந்து பெருக்கெடுத்து ஓடியதால் நிதியின் அருகில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு... தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய தயார்.. பிரிட்டன் பிரதமர் உறுதி
ஆராய்ச்சியாளர்கள் விரைவு
இந்நிலையில், இந்த பனிப்பாறை வெடிப்பு எவ்வாறு நிகழ்ந்தது, இதன் பாதிப்புகள் என்ன என்பது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆராய்ச்சியாளர்கள் உத்தரகண்ட் மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பிலுள்ள பனிச்சரிவு குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் குழு தற்போது டேராடூனுக்கு சென்றுள்ளனர்.
விரைவில் ஆய்வு தொடக்கம்
இது குறித்து உள் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "DRDO-SASE அமைப்பின் ஆராய்ச்சியாளர் குழு டேராடூனுக்கு சென்றுள்ளனர். அவர்கள் விரைவில் பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்ட ஜோஷிமத் பகுதிக்குச் சென்று கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி பணிகளைத் தொடங்கவுள்ளனர். இதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்" என்றார்.
அடித்துச் செல்லப்பட்ட நீர்மின் நிலையம்
இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக தபோவன் அணையின் குறுக்கே கட்டப்பட்டு வந்த விஷ்ணுகாட் நீர்மின் நிலையம் முற்றிலுமாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அவர்களில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் தெரிவித்துள்ளார். மேலும், மாயமான 152 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
12 பேர் மீட்பு
மேலும், தற்போது தபோவன் பகுதியில் அமைந்துள்ள சுரங்கத்தில் 30 முதல் 35 பேர் சிக்கியுள்ளதாகவும் அவர்களை மீட்கும் பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சுரங்கம் 250 மீட்டர் நீளமுடையது என்றும் இதில் சிக்கியுள்ளவர்களை உயிருடன் மீட்க வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த சுரங்கத்தில் சிக்கியிருந்த 12 பேர் இதுவரை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.