பெங்களூருவில் 144 தடை உத்தரவு தொடரும் - போலீஸ் கமிஷனர் #cauvery
பெங்களூரு: காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்துக்கு எதிரான வன்முறை தொடரும் நிலையில் பெங்களூருவில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடகாவில் போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தினமும் 12 ஆயிரம் கன அடி வீதம் 20-ந்தேதி வரை தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு உச்சநீதிமன்றம் கடந்த 12-ந்தேதி உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே காவிரி கண்காணிப்பு குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செப்.,21ம் தேதி முதல் தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட காவிரி கண்காணிப்பு குழு உத்தரவிட்டது.
இதையடுத்து பெங்களூருவில் வரும் 25 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு தொடரும் என மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. பெங்களூரு, மைசூரு போன்ற இடங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும், தமிழர்களுக்கு எதிராக வன்முறை நடைபெறுவதைத் தடுக்கும் வகையில், தீவிர கண்காணிப்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளதாக, கர்நாடகா மாநில போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.