ஷாக்.. ராகுல் யாத்திரையில் சட்டென விழுந்த திக்விஜய் சிங்.. தள்ளிவிடப்பட்டாரா? வெடித்த வார்த்தை போர்
இந்தூர்: மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்று வரும் நிலையில் மூத்த தலைவர் திக்விஜய் சிங் பொத்தென தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதையடுத்து தற்போது வார்த்தை போர் ஏற்பட்டுள்ள நிலையில் திக்விஜய் சிங் தள்ளிவிடப்பட்டதாக பாஜக கூறியுள்ளது.
காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி தலைமையில் பாரத் ஜோடோ யாத்திரை தொடங்கி நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் காஷ்மீர் வரை நடந்து செல்கின்றனர்.
இது காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தும். வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு நிச்சயம் கைக்கொடுக்கும் என ராகுல் காந்தி நம்புகிறார்.
ராகுல் பாதயாத்திரை போறெதல்லாம் வேஸ்ட்டா கோபால்? ராஜஸ்தானில் மீண்டும் கெலாட் VS பைலட் சண்டை!
பாரத் ஜோடோ யாத்திரை
இதனால் மொத்தம் 12 மாநிலம், 2 யூனியன் பிரதேசம் வழியாக 150 நாட்கள் வரை நடைபெறும் இந்த யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்தில் நடந்து வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் 7 ம் தேதி கன்னியாகுமரியில் துவங்கிய இந்த யாத்திரை தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராவை கடந்து மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது. நேற்று முன்தினமும், நேற்றும் பிரியங்கா காந்தியுடன் ராகுல் காந்தியுடன் இணைந்து யாத்திரை சென்றார்.
மபியில் யாத்திரை
இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் பாரத் ஜோடோ யாத்திரை துவங்கியது. கார்கோன் மாவட்டத்தில் இன்று காலை துவங்கிய நடைப்பயணத்தின் மத்திய பிரதேச முன்னாள் முதல்வர்கள் திக் விஜய் சிங், கமல்நாத் உள்பட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். பார்ஹவாவில் முதல் சுற்று நடைப்பயணம் முடிந்த நிலையில் தலைவர்கள், தொண்டர்கள் ஓய்வு எடுத்தனர்.
சட்டென விழுந்த திக்விஜய் சிங்
இந்த வேளையில் சாலையோரம் இருந்த ஓட்டல் நோக்கி திக்விஜய் சிங் சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக கால்தவறி பொத்தென விழுந்தார். இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த கட்சியினர் உடனடியாக அவரை மீட்டனர். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இந்நிலையில் தான் திக்விஜய் சிங் சாலையில் கால்தவறி விழுந்தது தொடர்பாக காங்கிரஸ், பாஜகவினர் இடையே கடுமையான வார்த்தை போராக மாறியுள்ளது.
காங்கிரஸ் குற்றச்சாட்டு
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரான ஜெய்ராம் ரமேஷ், ‛‛மத்திய பிரதேசத்தில் திக்விஜய் சிங் கால்தவறி கீழே விழுந்தார். இதற்கு மோசமான சாலைகள் தான் காரணம். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுஹான் சமீபத்தில் சாலைகள் பற்றி பெருமையாக பேசினார். மத்திய பிரதேசத்தில் உள்ள சாலைகள் அமெரிக்காவின் சாலைகளை விட சிறப்பாக உள்ளது என்றார். உண்மை அதுவல்ல. இதற்கு முன்பு 3 முறை திக்விஜய் சிங் தவறி விழப்போன நிலையில் தற்போது விழுந்துள்ளார்'' என கூறினார்.
தள்ளிவிடப்பட்ட திக்விஜய் சிங்?
இதற்க அந்த மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் நரேந்திர சலுஜா தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛காங்கிரஸ் தொண்டர்கள் தள்ளிவிட்டதால் தான் திக்விஜய் சிங் விழுந்தாரே தவிர மோசமான சாலைகள் காரணமல்ல என்பது வீடியோ பார்த்தால் தெரிகிறது'' என பதிலடி கொடுத்துள்ளார். தற்போது இதுதொடர்பாக காங்கிரஸ்-பாஜக இடையே தொடர்ந்து வார்த்தை போர் நீடித்து வருகிறது.