உத்தர்காண்ட்டில் 10 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவல்? கவிழ்கிறது காங். அரசு?
டேராடூன்: லோக்சபா தேர்தல் நடைபெறும் சூழலில் உத்தர்காண்ட் மாநில காங்கிரஸ் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சத்பால் மகாராஜ் திடீரென பாஜகவில் இணைந்ததுடன் 10 எம்.எல்.ஏக்களையும் தாவ வைக்கப் போவதாக அவர் கூறியுள்ளதால் உத்தர்காண்ட் மாநில காங்கிரஸ் அரசு கவிழும் நிலை உருவாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. தற்போது லோக்சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரான சத்பால் மகாராஜ் திடீரென பாஜகவில் இன்று இணைந்தார்.
உத்தர்காண்ட் மாநில முதல்வராக ஹரீஷ் ராவத் தேர்வு செய்யப்பட்டது முதலே சத்பால் மகாராஜ் அதிருப்தியில் இருந்து வந்தார். அண்மையில்கூட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாநில அரசு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்று புகார் கூறி இருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் பாஜக தேசியத் தலைவர் ராஜ்நாத் முன்னிலையில் சத்பால் மகாராஜ் அக்கட்சியில் இணைந்தார். அவரைத் தொடர்ந்து ஆதரவாளர்களான 10 எம்.எல்.ஏக்களும் பாரதிய ஜனதாவுக்கு தாவ உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் உத்தர்காண்ட் மாநில காங்கிரஸ் அரசு கவிழும் நிலை உருவாகி உள்ளது. 70 இடங்களை கொண்ட அம்மாநில சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் 34 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்களில் 10 பேர் பாஜகவுக்கு தாவினால் ஆட்சி கவிழ்வதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறப்படுகிறது.