மேகேதாட்டு: கர்நாடகத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய தீர்மானம் - என்ன நடந்தது?
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் திங்கட்கிழமை (மார்ச் 21) தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் மேகேதாட்டு அணை திட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, அணை விவகாரம் குறித்து தமிழக அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மேகேதாட்டு அணை விவகாரம் குறித்த தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார்.
அப்போது அவர், காவிரி நதிநீர் நடுவர் மன்றம் அல்லது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை கர்நாடக அரசு மதிக்கவில்லை என்றும், இணைப் படுகையில் உள்ள மாநிலங்களிடமிருந்தோ இந்திய அரசிடமிருந்தோ அனுமதி பெறாமல் அணை கட்ட முன்வருகிறது என்று குற்றம்சாட்டினார்.
இதைத்தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், கர்நாடகத்தின் ஒருதலைப்பட்ச செயல்பாடு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் இந்த நடவடிக்கையை சட்டப்பேரவை மாளிகை வன்மையாகக் கண்டிக்கிறது" என்றும் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக அரசுக்கு மத்தியில் ஆளும் அரசு எவ்வித தொழில்நுட்பம் அல்லது சுற்றுச்சூழல் அல்லது வேறு எந்த அனுமதியும் அளிக்கக் கூடாது என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
- காவிரி - பெண்ணாறு உட்பட 5 நதி நீர் இணைப்பு திட்டங்களுக்கு வரைவு அறிக்கை தயார்: பட்ஜெட் அறிவிப்பு
- தமிழ்நாடு பட்ஜெட் 2022: டெல்டாவில் முன் கூட்டியே தூர் வாரும் பணிகள் - விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்?
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், மேகேதாட்டு தொடர்பான டிபிஆர்-ஐ (விரிவான திட்ட அறிக்கை) பரிசீலிக்க வேண்டாம் என்றும் சட்டப்பேரவை கேட்டுக் கொண்டுள்ளது.
மேகேதாட்டு அணை விவகாரத்தில் கர்நாடக அரசின் முயற்சியை தடுக்கும் தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் ஆதரிப்பதாகவும் சட்டப்பேரவை தீர்மானம் கூறுகிறது.
முன்னதாக, இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் துரைமுருகன் கர்நாடக அரசை கடுமையாக சாடினார்.
https://twitter.com/TNDIPRNEWS/status/1505755253517733891
"காவிரி தண்ணீரை தமிழ்நாடு பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ள இடத்தில் அணை கட்டுவோம் என்று கர்நாடக அரசு கூறுவது எவ்வளவு கொடுமை. உச்ச நீதிமன்றம் சொன்னதை மதிக்க மாட்டோம் என்று ஒரு மாநில அரசு சொல்கிறது... கூட்டாட்சி எங்கே இருக்கிறது?" என்று துரைமுருகேன் பேசினார்.
மேலும் அவர், மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாட அரசின் முயற்சியை, தமிழகத்திற்கு தண்ணீர் வருவதை தடுக்கும் செயலாகவே கருத வேண்டும் என்று குறிப்பிட்டார்.
"உச்சநீதிமன்றம் சொன்னதை மாநிலம் கேட்கக்கூடாதா? எங்கே சுதந்திரம் இருக்கிறது? மத்தியில் யார் ஆட்சியில் இருந்தாலும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மட்டுமே தமிழகம் பார்க்கப்படுகிறது," என்றும் துரைமுருகன் குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி கருத்தால் சலசலப்பு
இந்த தீர்மானம் மீது அதிமுக சார்பில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசனார். இதைத்தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், மேகேதாட்டு விஷயத்துக்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகள் ஓரணியில் நின்று குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தார்.
மத்தியில் 10 ஆண்டுகளாக நடந்த ஆட்சியில் திமுக அங்கம் வகித்தபோது அதற்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி காவிரி பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம் என்பது தனது ஆதங்கம் என்றும் எடப்பாடி பழனிசாமி பேசினார். இதைத்தொடர்ந்து அவர் மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அதில் திமுக அங்கம் வகித்ததாக எடப்பாடி பழனிசாமி பேசியபோது பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து தமிழக அரசின் தீர்மானத்தை ஒருமனதாக ஆதரிப்பதாக பழனிசாமி குறிப்பிட்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய துரைமுருகன், தமிழக மக்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட தீர்மானம் கண்ணியத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் சில்மிஷம் செய்து தடங்கல் ஏற்படுத்த விடமாட்டேன் என்று தெரிவித்தார்.
நிச்சயம் தடுப்போம்: ஸ்டாலின் உறுதி
இதையடுத்து, நடுவர்மன்ற தீர்ப்புக்கும் உச்ச நீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கும் எதிராக கர்நாடக அரசு மேற்கொள்ளத் துடிக்கும் இந்த முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுத்து நிறுத்தும் என்று ஸ்டாலின் கூறினார்.
இந்த விஷயத்தில் எதிர்ப்பை தெரிவிப்பதிலும் சட்ட ரீதியிலான நடவடிக்கையிலும் அரசு உறுதியாக இருக்கும். அதில் எந்தவித பாகுபாடும் பார்க்க மாட்டோம். அணை கட்டக்கூடிய முயற்சிகளை இந்த அரசு எல்லா வடிவிலும் எதிர்க்கும் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.
https://twitter.com/TNDIPRNEWS/status/1505810758642200577
தமிழ்நாடு அரசு உழவர்களின் நலனை இந்த அரசு நிச்சயம் பாதுகாக்கும். தமிழ்நாட்டு உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம், நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று ஸ்டாலின் குறிப்பிட்டார்.
ஜி.கே. மணி (பாமக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்), வேல்முருகன் (தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி) உள்ளிட்ட உறுப்பினர்களும் தீர்மானத்துக்கு ஆதரவாக பேசினர்.
நிதி ஒதுக்கிய கர்நாடகா
கர்நாடக அரசு 2022-23ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், மேகேதாட்டு அணை திட்டத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தாலும், அணை கட்டுவதற்கு ஒரு செங்கல்லைக்கூட தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்று பொதுக்கூட்டம் ஒன்றில் சில வாரங்களுக்கு முன்பு துரைமுருகன் பேசியிருந்தார்.
இந்த நிலையில், அதே விவகாரம் தொடர்பான தீர்மானத்தை அவர் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்மொழிந்து அதை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுத்திருக்கிறார்.
சில வாரங்களுக்கு முன்பு கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, இந்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்து, மேகேதாட்டு சமநிலை நீர்த்தேக்கம், மகதாயி நீர்த் திட்டம் மற்றும் அப்பர் கிருஷ்ணா திட்டம் தொடர்பான நீர்ப் பிரச்னைகளைத் தீர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் தருவேன் என்று கூறியிருந்தார்.
தேவைப்பட்டால், வரும் வாரங்களில் கர்நாடகாவிலிருந்து அனைத்துக் கட்சிக் குழுவைத் தான் வழிநடத்தி ஷேகாவத்தை சந்திப்பேன் என்றும் பசவராஜ் பொம்மை கூறியிருந்தார். இத்தகைய சூழலில் தமிழகத்தின் நடவடிக்கை காவிரி, மேகேதாட்டு விவகாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்