வரி வசூலிக்க வீட்டின் முன்பு குப்பை வண்டியை நிறுத்திய நகராட்சி... அவமானத்தில் விவசாயி தற்கொலை!
ஹைதராபாத் : வீட்டு வரிப் பாக்கியைச் செலுத்தாததால், தனது வீட்டின் முன்பு நகராட்சி குப்பை வண்டியை நிறுத்தியதால் அவமானமடைந்த ஆந்திர விவசாயி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஆந்திரமாநிலம், சித்தூர் மாவட்டம் புங்கனூர் மாநகராட்சிக்கு உட்பட்டது எஸ்.எஸ்.பேட்டை பகுதி. அப்பகுதியில் ஆதி நாராயணா ( 46) என்ற விவசாயி ஒருவர் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். இதற்காக நகராட்சிக்கு கட்ட வேண்டிய வரி ரூ. 4.5 லட்சத்தை ஆதி கட்டவில்லை எனக் கூறப்படுகிறது.
எனவே, மார்ச் மாத இறுதிக்குள் முழு வரியையும் கட்டாயமாக செலுத்த வலியுறுத்தி நகராட்சி அதிகாரிகள் கடந்த 15 நாட்களில் 3 முறை நோட்டீஸ் வழங்கி உள்ளனர். மேலும் நகராட்சி அதிகாரிகள் ஆதிநாராயணாவை பல முறை நேரில் சந்தித்தும் இதுதொடர்பாக எச்சரித்துள்ளனர். இம்மாத இறுதிக்குள் வரி பாக்கியை செலுத்துவதாக ஆதி நாராயணாவும் உறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆதியின் வீட்டு முன்பு குப்பை வண்டியைக் கொண்டு வந்து நகராட்சி அதிகாரிகள் நிறுத்தியுள்ளனர். வரி பாக்கியைச் செலுத்தினால் தான் மீண்டும் குப்பை வண்டியை எடுத்துச் செல்வோம் என அவர்கள் ஆதியிடம் தெரிவித்துள்ளனர்.
இதனால் அவமானத்திற்கு ஆளான ஆதி, தனது கோழிப் பண்ணையிலேயே தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். ஆதியின் மரணம் தொடர்பாக அவரது மனைவி மற்றும் உறவினர்கள் புங்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அப்புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக புங்கனூர் நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘மார்ச் மாத இறுதிக்குள் இந்த நிதியாண்டின் கணக்கை முடிக்க வேண்டியிருப்பதால், வரி பாக்கியை வசூல் செய்ய வேண்டும் என்று மேல் அதிகாரிகள் உத்தரவிட்டனர். அதனால்தான் ஆதிநாராயணாவிடம் உடனடியாக வரி பாக்கியை செலுத்த வேண்டும் என கட்டாயப்படுத்தினோம்' எனத் தெரிவித்துள்ளனர்.