பட்ஜெட் அறிவிப்புகள் எதிரொலி.. பங்குச் சந்தையில் விவசாய துறை பங்குகள் எகிறின
டெல்லி: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பங்குச் சந்தைகளில் விவசாய துறை சார்ந்த பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் முன்பே, மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 132 புள்ளிகள் உயர்ந்து 36,097 ல் வர்த்தகமாகமானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 40 புள்ளிகள் உயர்ந்து 11,067 புள்ளிகளாக கூடியது.
பல்வேறு துறைகளுக்கும் ஊக்கம் அளிக்கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் பங்கு சந்தையில் புள்ளிகள் அதிகரித்திருந்ததாக கூறப்பட்டது.
இதனிடையே, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி காலை 11 மணிக்கு பட்ஜெட் உரையை ஆரம்பித்தது முதல் அரை மணி நேரமாக விவசாயத்திற்கு ஆதரவான அறிவிப்புகளைதான் வெளியிட்டு வந்தார்.
விவசாய காப்பீடு திட்டம், மானியம், உணவுப் பொருள் பதனிடுதல் திட்டம் போன்ற பலவற்றை, அவர் அறிவித்தார். இதனால் பங்குச் சந்தையில், உணவு பதனிடுதல், விவசாய உபகரணங்கள், உரம் தொடர்பான பங்குகளின் விலைகள் நன்கு உயர்வு கண்டன.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் கிராமப்புற மக்களை ஈர்க்கும் வகையில் விவசாயத்திற்கு இந்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் கொடுத்து அறிவிப்பு வெளியிட்டதாக கூறப்படுகிறது.