ஆஸ்துமா, உடல் பருமானால் அவதிப்பட்டாள் என் பேத்தி... மிஸ் அமெரிக்காவின் பாட்டி தகவல்
விஜயவாடா: மிஸ் அமெரிக்கா பட்டம் வென்று புதிய வரலாறு படைத்துள்ள இந்திய வம்சவாளிப் பெண்ணான நினா தவுலுரி மீது ஒருபக்கம் அமெரிக்கர்கள் பலர் விஷ விமர்சனங்களை தூவி வரும் நிலையில் நினாவின் மறுபக்கம் குறித்த பல விஷயங்களை அவரது 85 வயது பாட்டி கோடீஸ்வரம்மா வெளியிட்டுள்ளார்.
தனது பேத்தி பல போராட்டங்களை தனது வாழ்க்கையில் சந்தித்தவர் என்றும், அதைத் தைரியமாக சந்தித்து மீண்டு வந்தவர் என்றும் கூறியுள்ளார் கோடீஸ்வரம்மா.
நினாவுக்கு ஆஸ்துமா, உடல் பருமன் பிரச்சினைகள் இருந்ததாகவும், அதை திடமான மனதுடன் எதிர்கொண்டு வென்றதாகவும் கூறியுள்ளார் கோடீஸ்வரம்மா.
நினா வென்றதில் ஆச்சரியமில்லை
இதுகுறித்து கோடீஸ்வரம்மா கூறுகையில், எனது பேத்தி வெற்றி பெற்றதில் ஆச்சரியம் இல்லை. காரணம், அவள் வெல்வாள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவளது பற்று, திறமை மீது எனக்கு நம்பிக்கை உண்டு.
சாதாரணப் பெண் அல்ல
எனது பேத்தி சாதாரணப் பெண் அல்ல. போராட்டக் குணம் படைத்தவள். சாதிக்கப் பிறந்தவள். ஆஸ்துமா, உடல் பருமன் பிரச்சினையால் பெரும் அவதிப்பட்டவள். ஆனால் தனது திடமான மனதாலும், விடா முயற்சியாலும் அதிலிருந்து விடுபடட்டாள் என்றார் பாட்டி.
நினா மட்டும்தான் டாக்டர் ஆகவில்லை
இன்னொரு உறவுக்காரப் பெண் கூறுகையில், நினா குடும்பத்தில் அவள் மட்டும்தான் டாக்டருக்குப் படிக்கவில்லை. அவரது தந்தை கோடீஸ்வர செளத்ரியும், தாயார் ஷீலா ரஞ்சனியுமஅமெரிக்காவில் டாக்டர்களாக உள்ளனர். அவரது தாய்மாமாவும், அத்தையும் கூட டாக்டர்கள்தான். நினாவின் அக்கா மீனா டாக்டருக்குப் படித்து வருகிறார். அவரது பெரியப்பாக்களும் கூட அமெரிக்காவில் டாக்டர்களாக உள்ளனர் என்றார்.
நினா வழி புது வழி...
கோடீஸ்வரம்மா மேலும் கூறுகையில், நினாவும் கூட டாக்டருக்குப் படித்து இதயவியல் நிபுணராக வேண்டும்தான் என்றுதான் ஆசைப்பட்டாள். ஆனால் பின்னர் புதிய பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டாள். இப்போது மிஸ் அமெரிக்கா என்ற உச்சத்தையும் தொட்டு விட்டாள் என்றார்.
81ல் செட்டிலான கோடீஸ்வர செளத்ரி
நினாவின் பெற்றோர் தங்களது திருமணத்திற்குப் பின்னர் 1981ம் ஆண்டு அமெரிக்கா போய் செட்டிலாகி விட்டனராம்.
கடைசியாக 2007ல் வந்த நினா
நினா கடைசியாக விஜயவாடாவுக்கு 2007ம் ஆண்டு வந்துள்ளளார். அப்போது மிஸ் அமெரிக்கா போட்டியின் டீன் பிரிவு போட்டியில் அவர் 2வது இடத்தைப் பெற்றார். அதன் பின்னர் விஜயவாடா வந்துள்ளார்.