அதிகார பசி’யில் பாஜக; செத்த பாம்புகளான காங்., தேசியவாத காங் : தாக்கும் சிவசேனா!
மும்பை: பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப் பசியில் இருக்கிறது என்றும் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் செத்துப் போன பாம்புகள் என்றும் சிவசேனா கடுமையாகத் தாக்கியுள்ளது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது.
இந்த நிலையில் சிவசேனா அனைத்து கட்சிகளையும் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. சிவசேனா தமது நாளேடான சாம்னாவில் வெளியிட்டு உள்ள கட்டுரையில் எழுதி இருப்பதாவது:
உண்மையான எதிரி
சிவசேனாவின் உண்மையான எதிரி யார் என கேட்டால் அது பாரதிய ஜனதா தான். நாம் அதற்கு எதிராக போராட வேண்டும்.
செத்த பாம்பு
ஆனால் காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் செத்த பாம்புகள். அதனால் அந்த கட்சிகளினால் ஆபத்து இல்லை. தற்போது நமது முன்னிலையில் இருப்பது மகாராஷ்டிராவின் நலன் தான்
அதிகாரப் பசி
பாரதிய ஜனதா ஜனதா ஒரு அதிகார பசி உள்ள கட்சி. நமது முன்னாள் கூட்டாளியை தோற்கடிப்பதே நமது ஒரே நோக்கம். பாஜக பல்வேறு மாநிலங்களில் இருந்து பல எம்.பி.க்களை பெற்றது. பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பலருக்கும் தெரியும் சிவசேனா இல்லை என்றால் அவர்கள் தோல்வி உறுதி என்பது.
பிராந்தியவாத அரசியல்
பாஜக சாதி அடைப்படையிலான மற்றும் பிராந்தியவாத அரசியல் நடத்துகிறது. நேற்றுவரை பிராந்திய தலைவர்கள் முலாயம் சிங்யாதவ், லல்லுபிரசாத் யாதவ் மற்றும் பஜன்லால் ஆகியோர் இங்கு வந்து ஒட்டு வங்கி அரசியலில் ஈடுபட முயன்றனர். ஆனால் இப்போது குஜராத் முழுவதும் மகாராஷ்டிராவுக்கு வந்து குஜராத்தி வாக்காளர்களின் மனதில் குழப்பததை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
சிவசேனா பின்னால் குஜராத்திகள்
ஆனால் மகாராஷ்டிராவில் உள்ள குஜராத்தியர்கள் அர்ப்பணிப்பு, தாக்கரேயின் மீது அவர்கள் கொண்டுள்ள அன்பு அவர்களை சந்தேகம் இல்லாமல் சிவசேனா பின்னால் நிற்க செய்யும்.
இவ்வாறு சாம்னாவில் எழுதப்பட்டுள்ளது.