இந்துக்கள் 'மெஜாரிட்டி'யாகவே இருக்க 10 குழந்தை பெத்துக்கோங்க: உ.பி. சிவசேனா தலைவர்
லக்னோ: பெரும்பான்மையினர் தகுதியை தக்க வைத்துக் கொள்ள இந்து குடும்பங்கள் 10 குழந்தைகளுக்கும் மேல் பெற்றெடுக்க வேண்டும் என்று சிவசேனா தெரிவித்துள்ளது.
சிவசேனா கட்சியின் உத்தர பிரதேச மாநில தலைவர் அனில் சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளாராம். அதில் 10 குழந்தைகளுக்கு மேல் உள்ள இந்து குடும்பங்களுக்கு ரூ.21 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். தேசிய நலன் கருதி மக்கள் தொகையை அதிகரித்தமைக்காக அந்த குடும்பங்களுக்கு சான்றிதழும் வழங்கப்படுமாம்.
அனிலின் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு சிவசேனா தலைவர் சுரேந்திர சர்மா கூறுகையில், இந்து மக்கள் தொகை குறைந்து கொண்டே சென்றால் நம் நாட்டில் நாம் சிறுபான்மையினர் ஆகிவிடுவோம் என்றார்.
சிவசேனா தலைவர்களின் பேச்சுக்கு பிற அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து முன்னாள் சமாஜ்வாடி கட்சி தலைவரும், பத்திரிக்கையாளருமான ஷாஹித் சித்திக்கி கூறுகையில்,
10 குழந்தைகளை பெற்றெடுப்பது பெண்களுக்கு தான் வலி. அதற்கு சிவசேனா வெறும் ரூ.21 ஆயிரம் தான் கொடுக்கிறது. இந்த நினைப்பு தவறு என்றபோதிலும் சிவசேனா பெண்களுக்கு ரூ.21 லட்சமாவது அளிக்க வேண்டும் என்றார்.