மேகதாது அணை: திமுக- காங்கிரஸ் மோதல்- தமிழ்நாடு அரசு மீது கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடும் சாடல்!
மைசூர்: மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு தேவையற்ற தொல்லைகளை தருவதாக கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் சித்தராமையா பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.
திமுகவும் காங்கிரஸும் நீண்டகாலமாக கூட்டணியில் இருக்கின்றன. அகில இந்திய அளவிலான "இந்தியா" கூட்டணியில் இரு கட்சிகளும் முதன்மை கட்சிகளாக இருக்கின்றன. காவிரி நதிநீர் விவகாரத்தில் திமுக, காங்கிரஸ் இடையே தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் முன்வைக்கப்படுகின்றன.

மைசூரில் காவிரி நதிநீர் பிரச்சனை தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா கூறியதாவது: மேகதாது அணை கட்டுவதற்கு மத்திய பாஜக அரசு ஒப்புதல் தரவில்லை. இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தேவை இல்லாமலேயே எதிர்க்கிறது.
தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் அம்மாநிலத்துக்கு தேவையான 177.25 டிஎம்சி நீரை கர்நாடகா வழங்கும். அதில் மாற்றம் இல்லை. மேகதாது அணை என்பது கர்நாடகாவுக்குள் கட்டப்பட இருக்கிறது. இதில் தேவையற்ற தொந்ததரவை தமிழ்நாடு அரசு தருகிறது.

மேகதாது அணை கட்ட விரிவான அறிக்கை கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் மத்திய பாஜக அரசு ஒப்புதல் தராமல் இருக்கிறது. காவிரி நதிநீர் ஆணையம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. ஆகையால் மேகதாது அணை கட்டுவதற்கு ஒப்புதல் தர காவிரி ஆணையத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் விடுக்க வேண்டும்.
கர்நாடகா அரசு கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் நாங்கள் அரசியலே செய்யமாட்டோம் என்கிறது பாஜக. ஆனால் கிருஷ்ணராஜ சாகர் அணையில் போராட்டம் நடத்தி அரசியல் செய்துவிட்டுதான் பாஜகவினர் போயுள்ளனர்.

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதால்தான் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிட்டோம். கர்நாடகா மாநில மக்களின் குடிநீர் தேவையையும் மாநில அரசு கவனத்தில் எடுத்துக் கொண்டுதான் செயல்படுகிறது. கர்நாடகா மக்கள் நலனைப் பாதுகாக்கும் கடமை எங்களுக்கும் இருக்கிறது. நீர் பிரச்சனையில் குடிநீர்தான் முதன்மையானது.
தற்போது காவிரி நீர் கேட்டு தமிழ்நாடு அரசுதான் உச்சநீதிமன்றத்தை நாடியிருக்கிறது. இதுவரை உச்சநீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. காவிரி நதிநீர் வழக்கு செப்டம்பர் 21-ல் விசாரணைக்கு வரும். காவிரி மேலாண்மை ஆணையத்திடம் இன்று வரை தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படும். இவ்வாறு சித்தராமையா கூறினார்.












Click it and Unblock the Notifications